நீங்க பார்ட்டிக்கு கண்டிப்பா வரணும் இல்லைனா?- ஆமிர்கானை மிரட்டிய நிழல் உலக தாதா? பகீர் கிளப்பும் தகவல்!
Author: Prasad1 July 2025, 11:59 am
நிழல் உலக தாதாவின் அழைப்பு
ஒரு காலகட்டத்தில் பாலிவுட் திரையுலகம் ஒரு நிழல் உலக டான் கையில் இருந்தது. பாலிவுட்டில் பல திரைப்படங்களை தயாரிக்க நிதி அளித்து வந்தார் அந்த டான். அந்த சமயத்தில் பாலிவுட் நடிகர்களுக்கு பல அச்சுறுத்தல்கள் வந்தன. அப்படி ஒரு சம்பவத்தைத்தான் ஆமிர்கான் தனது சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார்.
1990களில் ஆமிர்கான் பாலிவுட்டின் முன்னணி நடிகராக வளர்ந்திருந்த சமயம். அந்த சமயத்தில் நிழல் உலக டானிடம் இருந்து ஒரு பார்ட்டிக்கான அழைப்பு வந்ததாம். ஆனால் அந்த அழைப்பை நிராகரித்திருக்கிறார் ஆமிர்கான். இது குறித்து அவர் அந்த பேட்டியில் கூறியதை பார்க்கலாம்.

என்னை கட்டிப்போட்டு அடித்தாலும் வரமாட்டேன்…
“அந்த நிழல் உலக டான் துபாயில் ஏற்பாடு செய்திருந்த பார்ட்டியில் கலந்துகொள்ள அந்த டானின் தரப்பில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால் அதனை நான் நிராகரித்துவிட்டேன். ஆனாலும் அவர்கள் என்னை விடவில்லை. அந்த பார்ட்டியில் நான் கலந்துகொள்ளவேண்டும் என தொடர்ந்து வற்புறுத்திக்கொண்டே இருந்தார்கள். எனக்கு நிறைய பணம் தருவதாக கூறினார்கள். ஆனாலும் நான் மறுத்துவிட்டேன்.
திடீரென அவர்களின் டோன் மாறத் தொடங்கியது. ‘நீங்கள் எங்களது பார்ட்டிக்கு வருவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டோம், இப்போது வரவில்லை என்றால் எங்களுக்கு கௌரவப் பிரச்சனை ஆகிவிடும்’ என கூறினார்கள். அதற்கு நான், ‘நான் முதலில் இருந்தே பார்ட்டிக்கு வரமுடியாது என்று கூறிவருகிறேன். ஆனாலும் நீங்கள் விடுவதாக இல்லை. நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்த ஆட்கள், உங்களால் என்னை அடித்து, கட்டிப்போட்டு கூட இழுத்துச் செல்ல முடியும். எனினும் நான் எனது விருப்பப்படிதான் வருவேன்’ என பதிலளித்தேன். அதன் பின் அவர்களிடம் இருந்து அழைப்பு வரவேயில்லை.
எனது இரண்டு குழந்தைகளும் அப்போது சிறு பிள்ளைகளாக இருந்தனர். எனது பெற்றோர்கள் கூட என்னிடம், ‘நீ என்ன செய்துகொண்டிருக்கிறாய். அவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்” என்று சொன்னார்கள். ஆனால் நான் எனது பெற்றோரிடம், ‘நான் எனது விருப்பத்திற்குரிய வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகிறேன். எனக்கு அங்கு போக விருப்பமில்லை. எனக்கு என்னுடைய நெருக்கமானவர்களின் மீதான அக்கறைதான் முக்கியம்’ என பதிலளித்தேன்” என ஆமிர்கான் அப்பேட்டியில் தனக்கு நடந்த சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார். அந்த பார்ட்டிக்கான அழைப்பை ஏற்க மறுத்த போதிலும் தனது குடும்பத்திற்கு எதாவது அச்சுறுத்தல் வந்துவிடுமோ என்ற பயத்தில் இருந்ததாகவும் அப்பேட்டியில் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.