வீட்டோட மாப்பிள்ளையா? எல்லாமே பொய்- ரவி மோகனுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த ஆர்த்தி!
Author: Prasad20 May 2025, 2:56 pm
ரவி மோகன் – ஆர்த்தி பிரிவு
ரவி மோகனும் ஆர்த்தியும் தங்களது பிரிவை அறிவித்த பிறகு ரவி மோகன் ஆர்த்தியின் மீதும் அவரது தாயாரின் மீது பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார். அதாவது தன்னை வீட்டோடு மாப்பிள்ளையாக வைத்திருந்தார்கள் என்றும் தனது கால்ஷீட்டை அவர்களே முடிவு செய்தார்கள் எனவும் தனது பணத்தையே அவர்கள் விரும்பினார்கள் எனவும் பல குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
இதனிடையே கெனீஷாவுடன் இணைந்து ரவி மோகன் கலந்துகொண்ட திருமண விழா புகைப்படங்கள் ஒரு பிரளயத்தை கிளப்பியது. அதன் பின் மனம் நொந்தபடி ஆர்த்தி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அதனை தொடர்ந்து ரவி மோகன், ஆர்த்தியுடனான உறவில் இருந்து வெளியே வந்தது நிம்மதியாக இருக்கிறது என ஒரு நான்கு பக்க அறிக்கையை வெளியிட்டிருந்தார். இந்த நிலையில் தற்போது ஆர்த்தி ரவி மோகனுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
எல்லாமே பொய்
“எங்களது திருமண வாழ்வு இப்படி ஒரு நிலைக்கு வந்ததற்கு காரணம் பணமோ, அதிகாரமோ, பிறர் தலையீடோ அல்லது கட்டுபாடோ அல்ல. எங்கள் வாழ்வில் வந்த ஒரு மூன்றாவது நபரே காரணம்” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ள ஆர்த்தி,
“வீட்டோடு மாப்பிள்ளையாக இருந்தேன் என்ற அவரின் குற்றச்சாட்டு பொய்யானது. எங்களுக்கு திருமணமான நாள் முதல் நாங்கள் என் மாமனார், மாமியாருடன் புகுந்த வீட்டிலும் மற்றும் எங்களுக்கு சொந்தமான ஆழ்வார்பேட்டை வீட்டிலும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இரண்டு வீட்டிலுமே வசித்து வந்தோம். கொரோனா காலத்தில் நாங்கள் வீட்டை மாற்றிய ஓரிரு வாரங்களை தவிர நாங்கள் எப்போதும் என்னுடைய பெற்றோர் வீட்டில் தங்கியதே இல்லை” எனவும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.