படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் பணம் கேட்ட ப்ளூ சட்டை மாறன் : நடிகர் பார்த்திபன் வெளியிட்ட பகீர் ஆடியோ..!!

Author: Babu Lakshmanan
20 July 2022, 9:48 pm

படத்தை விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் 3 லட்சம் பணம் கேட்டதாக நடிகர் பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

பார்த்திபன் இயக்கத்தில் நான் லீனியர் திரைக்கதை முறையில் உலகின் முதல் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட படமான ‘இரவின் நிழல்’ கடந்த 15ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தத் திரைப்படமானது ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

இப்படியிருக்கையில், பிரபல சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன், இரவின் நிழல் படம் குறித்து தனது விமர்சனத்தை முன்வைத்தார். அதாவது, இந்தப் படம் உலகின் முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படமல்ல என்றும் இரானியன் படமான ஃபிஷ் அண்ட் கேட் தான் உலகின் முதல் நான் லீனியர் படம் எனவும் அவர் கூறினார்.

இதனால் கோபமடைந்த பார்த்திபனின் ரசிகர்கள் சிலர், புதுச்சேரியில் ப்ளூ சட்டை மாறனின் உருவபொம்மையை சிலர் எரித்து தங்களின் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.

இந்த நிலையில், தனது ரசிகர்களின் செயலுக்காக ப்ளூ சட்டை மாறன் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டு குரல் பதிவு ஒன்றை நடிகர் பார்த்திபன் வெளியிட்டார். அதில், படத்தை விமர்சனம் செய்ய ப்ளூ சட்டை மாறன் ரூ.3 லட்சம் கேட்டதாக பகீர் தகவ வெளியிட்டுள்ளார்.

அவர் பேசியதாவது :- இரண்டு நாட்களாக நடந்துகொண்டிருக்கும் பிரச்சனைக்கான தன்னிலை விளக்கம்தான் இந்தப் பதிவு. என்னுடைய பரபரப்பான ரசிகர் மன்றங்களை ஆரம்பக்காலத்திலேயே பார்த்திபன் மனிதநேய மன்றம் என மாற்றினேன். பார்த்திபன் மனிதநேய மன்றத்தின் பணி மனிதத்தோடு இயங்குவது மட்டுமே. அந்தக் கொடும்பாவி எரிப்பு சம்பவத்தில் பார்த்திபன் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த யாரும் ஈடுபடவில்லை.

நான் பாண்டிச்சேரிக்கு சென்ற பிறகுதான் இப்படி ஒரு சம்பவம் நடந்ததே எனக்குத் தெரியும். எனக்கு கொடும்பாவி எரிப்பில் எப்போதுமே உடன்பாடு கிடையாது. கொடும்பாவி எரிப்பை யார் செய்தாலும் தவறுதான். இப்படி ஒரு கூட்டம் எனக்கு இருந்தால் இப்படியெல்லாம் கஷ்டப்படாமல் கமர்ஷியல் ஆக்‌ஷன் படங்கள் பண்ணி இந்தக் கூட்டத்தைத் தக்க வைத்திருப்பேன். உருவபொம்மை எரிப்பது அவர் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு எவ்வளவு கஷ்டத்தைத் தரும் என்று எனக்குத் தெரியும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதனால் ப்ளூ சட்டை மாறனின் குடும்பத்தாரிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

ரசிகர் மன்ற நிர்வாகியை, நீங்க பண்றது தப்பு தான்னு 10 பேருக்கு முன்னாடி மேடைல கண்டிக்கிறது அவர் மேல இருக்குற மரியாதையை குறைக்குற மாதிரி ஆகிடுமேன்னு, தனிப்பட்ட முறையில் அவரை கண்டிச்சேன். அதுக்கு அவர், சார் படத்தை விமர்சனம் பண்ண அவர் 3 லட்சம் கேட்டாரு, அதான் நான் அப்படி செஞ்சேன்னு சொன்னாரு, என்று குறிப்பிட்டுள்ளார்.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்