சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா..? எங்களுடைய நோக்கமே இதுதான் : பரபரப்பு அறிக்கை!
Author: Udayachandran RadhaKrishnan20 August 2025, 4:27 pm
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் நடிகர் சூர்யா களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது மற்றும் உண்மைக்கு மாறானது என சூர்யா நற்பணி இயக்கம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது தொடர்பாக இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இத்தகைய செய்திகள் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு எதிரானவை என்றும், அவரது கவனம் சினிமா மற்றும் அகரம் அறக்கட்டளைப் பணிகளில் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.சூர்யா நற்பணி இயக்கத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
“ஊடக நண்பர்களுக்கும், சமூக வலைதள நண்பர்கள், சகோதர-சகோதரிகளுக்கும் அகில இந்திய சூர்யா தலைமை நற்பணி இயக்கத்தின் சார்பில் வணக்கங்கள். கடந்த சில நாட்களாக அண்ணன் சூர்யா அவர்கள் குறித்து சில பொய்யான தகவல்கள் இணைய ஊடகங்களில் பரவி வருகின்றன.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் அண்ணன் சூர்யா களமிறங்க உள்ளதாக சமூக வலைதளங்களை மையமாகக் கொண்டு பொய்யான செய்திகள் பரப்பப்படுகின்றன. இந்தச் செய்தி முற்றிலும் உண்மைக்கு மாறானது மற்றும் பொய்யானது என்பது மட்டுமல்ல, அண்ணன் சூர்யாவின் கோட்பாடுகளுக்கு முரணானது.

அவரது கலை உலகப் பயணமும், அகரம் அறக்கட்டளையும் தற்போது அவருக்கு முழு நிறைவை அளித்துள்ளன. சமீபத்தில் நடந்த அகரம் நிகழ்வு, தமிழ்நாடு மட்டுமின்றி உலக அளவில் கவனம் ஈர்த்ததற்கு காரணமான உங்களுக்கு எங்கள் மகிழ்ச்சி கலந்த நன்றிகள்.
அண்ணன் சூர்யாவை நேசிக்கும் கோடிக்கணக்கான தம்பி-தங்கைகள், நண்பர்களின் ஆதரவுடன், அவரது கவனம் சினிமாவில் மட்டுமே இருக்கும். அண்ணன் சூர்யா குறித்து பரவிய இந்த பொய்யான செய்தியை நாங்கள் திட்டவட்டமாக மறுக்கிறோம். நன்றி!” இந்த அறிக்கையின் மூலம், சூர்யாவின் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
