தென்னிந்தியர்களை கேலி செய்த பாலிவுட் – ஹிந்தி சினிமாத்துறை மீது பாய்ந்த மதுபாலா!
Author: Prasad16 August 2025, 12:20 pm
கனவுக்கன்னி
1990களில் அப்போதைய இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் மதுபாலா. இவர் “அழகன்” திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதனை தொடர்ந்து தமிழில், “ரோஜா”, “ஜென்டில்மேன்” போன்ற பல திரைப்படங்களில் நடித்தார். இதனிடையே ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தார் மதுபாலா.
தற்போது பல திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மதுபாலா நடித்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மதுபாலா, ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் தென்னிந்திய நடிகைகளை கேலி செய்த சம்பவங்கள் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

பாலிவுட்டில் நடந்த சம்பவம்?
“தென்னிந்திய கலைஞர்கள் ஒரு காலகட்டத்தில் பாலிவுட்டில் கேலிக்குள்ளாக்கப்பட்டனர். அந்த சமயங்களில் நாங்கள் சந்தித்த பிரச்சனைகள் பல. நாமெல்லாம் இந்தியர்கள்தானே. ஏன் ஒருவரை ஒருவர் கேலி செய்துகொள்கிறோம். ஆனால் இவை அனைத்தும் அந்த சமயத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அந்த நேரத்தில் அதனை எதிர்த்து எப்படி போராடுவது என எனக்கு தெரியவில்லை.
எனவே நாங்கள் ஹிந்தியை எப்படி சரளமாக பேசுவது என யோசித்தோம். என்னுடைய உச்சரிப்பை பார்த்து நான் ஒரு தென்னிந்தியர் என அவர்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என நினைத்தேன். ஆனால் இப்போது அப்படி அல்ல. என்னுடைய உச்சரிப்பில் தென்னிந்திய மொழியின் அடர்த்தி அதிகமாக தென்பட்டால் இப்போதெல்லாம் அதில் நான் பெருமைப்படுகிறேன்.
ஆம், நான் ஒரு தென்னிந்தியன்; நான் ஹிந்தி பேசுகிறேன். எனது ஹிந்தியில் உங்களுக்கு பிரச்சனை இருந்தாலும் எனக்கு கவலை இல்லை, அதனை நான் கற்றுக்கொள்ள முடியும்” என அப்பேட்டியில் மதுபாலா பேசியுள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
