வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!
Author: Prasad18 June 2025, 5:25 pm
தூக்கத்தை கெடுத்த மதுபாலா
பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”, “ஜென்டில்மேன்”, “மிஸ்டர் ரோமியோ” போன்ற திரைப்படங்களில் நடித்த மதுபாலா அந்த காலகட்டத்து இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்து தூக்கத்தை கெடுத்தார்.
இதனிடையே ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்தார் மதுபாலா. ஒரு கட்டத்திற்கு பிறகு குணச்சித்திர வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். அந்த வகையில் தற்போது “கண்ணப்பா” என்ற தெலுங்கு திரைப்படத்தில் பன்னாகா என்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
“கண்ணப்பா” திரைப்படம் வருகிற ஜூன் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட மதுபாலா, தன்னை வற்புறுத்தி முத்த காட்சி ஒன்றில் நடிக்க வைத்த அதிர்ச்சி சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

வேதனையான அனுபவம்
“நான் ஒரு பாரம்பரிய குடும்பத்தில் வளர்ந்ததால் நெருக்கமான காட்சிகளில் நடிப்பது எனக்கு தர்ம சங்கடமாக இருந்தது. இதன் காரணமாக நான் பல திரைப்பட வாய்ப்புகளை நிராகரித்துள்ளேன். நான் ஒரு படத்தில் நடித்த போது முன் கூட்டியே என்னிடம் கூறாமல் திடீரென ஒரு முத்த காட்சியில் நடிக்க வற்புறுத்தினார்கள். அதுவும் உதட்டோடு உதடு முத்தக் காட்சி அது.
நான் அதற்கு மறுத்த நிலையில் என்னை சம்மதிக்க வைக்க என்னிடம் அதிக நேரம் பேசி உதட்டோடு உதடு முத்தக் காட்சி அந்த படத்தில் எந்தளவுக்கு அவசியம் என்பதை விளக்கினார்கள். அதன் பின் நான் அதில் நடித்தேன். எனக்கு வேதனையாக இருந்தது. ஆனால் படத்தை எடிட் செய்தபோது அந்த முத்த காட்சி படத்தில் தேவையில்லை என நீக்கிவிட்டார்கள். இப்போது இருக்கும் நடிகைகள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ஆனால் அந்த 22 வயதில் நான் அப்பாவியாக இருந்தேன்” என மிகவும் மனம் நொந்தபடி பகிர்ந்துகொண்டுள்ளார் மதுபாலா.
