அன்னைக்கே ஓங்கி அறைஞ்சிருக்கணும்- வம்பிழுத்த பத்திரிக்கையாளருக்கு தொகுப்பாளினியின் பதிலடி
Author: Prasad20 May 2025, 11:47 am
அத்துமீறிய பத்திரிக்கையாளர்
கடந்த 7 ஆம் தேதி “அம்பி” என்ற திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பை தொகுத்து வழங்கினார் ஐஸ்வர்யா ரகுபதி. அந்த சமயத்தில் அவர், வெயில் காலத்தில் உடலை பேணிக்கொள்வது குறித்து சில குறிப்புகளை வழங்கினார். அப்போது ஒரு பத்திரிக்கையாளர் ஐஸ்வர்யா ரகுபதி அணிந்திருந்த ஆடையை குறிப்பிட்டு, “நீங்கள் அணிந்திருக்கும் உடை கூட வெயிலுக்கானது என நினைக்கிறேன்” என்று ஒரு கேள்வி கேட்டார்.
அப்பத்திரிக்கையாளர் கேட்ட கேள்விக்கு ஐஸ்வர்யா ரகுபதி, “நாம் அம்பி என்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருக்கிறோம். இங்கு ஏன் எனது உடையை பற்றி பேச வேண்டும்?” என கூறி அதன் பின் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கத் தொடங்கிவிட்டார்.

இவ்வாறு பத்திரிக்கையாளர் அத்துமீறிய செய்தி இணையத்தில் வைரலாக பலரும் அப்பத்திரிக்கையாளரை கடுமையாக விமர்சித்தனர். இந்த நிலையில் நேற்று சாய் தன்ஷிகாவின் “யோகி டா” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவை தொகுத்து வழங்கிய ஐஸ்வர்யா ரகுபதி, அப்பத்திரிக்கையாளரை குறித்து பதிலடி கொடுக்கும் வகையில் பல விஷயங்களை பேசினார்.
அன்னைக்கே அறைஞ்சிருக்கணும்…
“அன்று என்னை ஒரு பத்திரிக்கையாளர் ஒரு கேள்வி கேட்டிருந்தார். நான் அணிந்திருந்தது கோடை காலத்திற்கான உடையா என்று. கோடை காலத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து காத்து வாங்கிட்டு வந்திருக்கியாமா என்பதுதான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பொருள் என்று ஐந்து விநாடிகளில் எனக்கு புரிந்தது. ஆனால் அன்று நான் இதற்கு கோபப்படுறதா அல்லது சபை நாகரீகம் கருதி அமைதியாக பதில் சொல்வதா என்ற குழப்பத்திலேயே அதனை கடந்துவிட்டேன். நான் உங்களுக்கு சரியான பதில் சொன்னேனோ இல்லையோ ஆனால் மக்கள் உங்களுக்கு சரியான பதில்களையும் சொல்லியிருந்தார்கள், சரியான கேள்விகளையும் கேட்டிருந்தார்கள்.
உங்கள் முகநூல் பக்கத்திலும் நீங்கள் கேட்ட கேள்வியை நியாயப்படுத்தியிருந்தீர்கள். இதெற்கெல்லாம் ஆரம்பப்புள்ளியாக நான் எதை பார்க்கிறேன் என்றால். ஒரு வெற்று விளம்பரத்திற்காக கோமாளித்தனமாக ஈடுபடக்கூடிய ஒரு நடிகர் என் கழுத்தில் மாலை போட முயற்சி செய்தபோதே நான் போலீஸில் புகார் அளித்து அவரை சிறையில் அடைத்திருந்தாலோ அல்லது அந்த நடிகரின் கன்னத்தை மேடையில் பழுக்க வைத்திருந்தாலோ, அது இங்கே வரை வந்திருக்காதோ என்று நான் நினைக்கிறேன். நான் அமைதியாக இருப்பதனால் நான் பலவீனமானவள் என்று நினைத்துக்கொண்டு உங்களை போன்ற ஆண்கள் உங்கள் பலத்தை என்னிடம் காட்ட வேண்டும் என நினைக்கிறீர்களா என்று தெரியவில்லை. உங்களுக்கு 60 வயது ஆகப்போகிறது, பணி ஓய்வு பெறப்போகிறீர்கள் என்று கேள்விப்பட்டேன். ஒன்றும் பிரச்சனை இல்லை. இது சுலபமான விஷயம்தான். ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கங்களுக்கு மாறுங்கள். நடைபயிற்சி செய்யுங்கள், இயற்கையை ரசியுங்கள், சந்தோஷமாக இருங்கள். பாஸிட்டிவான விஷயங்களை பேசுங்கள். இது சீக்கிரமாகவே சரி ஆகிவிடும்” என்று அப்பத்திரிக்கையாளருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசினார் ஐஸ்வர்யா ரகுபதி..
இவர் இவ்வாறு பேசியது அரங்கில் இருந்த பத்திரிக்கையாளர் பலரும் “அவர் கேட்ட கேள்வியில் தவறு இல்லை. நீ பேசுவதுதான் தவறு” என்று அப்பத்திரிக்கையாளருக்கு ஆதரவாக பேசினர். இதனால் அந்த அரங்கில் சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.