போதையின் பிடியில் தமிழ் திரையுலகம்? ஸ்ரீகாந்த்தை தொடர்ந்து சிக்கிய மற்றுமொரு நடிகர்!!
Author: Udayachandran RadhaKrishnan23 June 2025, 4:45 pm
தமிழ் சினிமா நடிகர்கள் போதையின் பிடியில் சிக்கியுள்ளனரா என்ற கேள்வி தற்போது ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ளதால் எழுந்துள்ளது.
தமிழ்நாட்டில் அண்மைக் காலமாக போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதாக அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் வருகின்றன.
சிறார்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பொருள் பயன்படுத்தி கைது செய்யப்பட்டு வருவது தமிழகத்தில் அதிகரித்து வந்தது. தற்போது தமிழ் திரைப்பட நடிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த மாதம் சென்னை நுங்கம்பாக்கத்தில் தனியார் மதுபான விடுதியில் அடிதடியில் ஈடுபட்டதாக அதிமுகவை சேர்ந்த பிரசாத், அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி கைது செய்யப்பட்டனர்.
இதையும் படியுங்க: மச்சி… இங்கிலாந்து வீரர்களை குழப்பிய கே.எல். ராகுல் : தீயாய் பரவும் வீடியோ!
பிரசாத் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்தார் என போலீசில் புகாரும் வந்தன. இதையடுத்து நுங்கம்பாக்கம், மயிலாப்பூர் காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டன. மேலும் போதைப் பொருள் பயன்படுத்தியதாக புகார்களும் எழுந்தன.
இதையடுத்து அவரிடம் விசாரணை துரிதப்படுத்தப்பட்டது. விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகின. அதில் நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஒரு கிராம் கொக்கைன் ரூ.12 ஆயிரத்திற்கு விற்றதும் தெரியவந்தது.
ஷாக் ஆன போலீசார், உடனே ஸ்ரீகாந்த்தை விசாரணை வளையத்துக்குள் அழைத்து வந்தனர். அவரிடம் நுங்கம்பாக்கம் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும் அவரை மருத்துவ பரிசோதனை செய்ததில் அவர் போதைப் பொருள் பயன்படுததியது உறுதியானது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ரோஜாக்கூட்டம், மனசெல்லாம், ஏப்ரல் மாதத்தில், பார்த்தபின் கனவு, ஜூட், நண்பன் போன்ற பல படங்களில் நடித்து வந்த ஸ்ரீகாந்த் தற்போது வாய்ப்பு பெரியதாக இல்லாமல் உள்ளார்.

இதே சமயம் அஜித்தை வைத்து, பில்லா, ஆரம்பம் படத்தை இயக்கிய இயக்குநர் விஷ்ணுவர்தனின் தம்பி நடிகர் கிருஷ்ணாவும் போதைப் பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் தொடர்பு வைத்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

கழுகு, யாமிருக்க பயமேன் படத்தில் நடித்த நடிகர் கிருஷ்ணா தற்போது கேரளாவில் படப்பிடிப்பில் உள்ளதாகவும், அவரை சென்னை அழைத்து வந்த விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா நட்சத்திரங்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இன்னும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
