கதை திருட்டு விவகாரத்தில் சிக்கிய ரியோ பட இயக்குனர்! டிரைலரோடு புகாரும் சேர்ந்து வெளிய வருதே?
Author: Prasad5 May 2025, 4:27 pm
Upcoming Hero
சன் மியூசிக் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர்தான் ரியோ. அந்த சமயத்திலேயே மிகப் பிரபலமான தொகுப்பாளராகவும் இளம் பெண்களின் மனம் கவர்ந்தவராகவும் அவர் வலம் வந்தார்.
இதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சிக்கு தாவிய ரியோ, இதனிடையில் பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அவர் முதலில் விக்ரம் பிரபுவின் “சத்ரியன்” திரைப்படத்தில் தோன்றினார். அதன் பின் அவர் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா” திரைப்படம்தான்.

இத்திரைப்படத்தை தொடர்ந்து “பிளான் பண்ணி பண்ணனும்”, “ஜோ”, “ஸ்வீட்ஹார்ட்” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். இதில் “ஜோ” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்த நிலையில் தற்போது “ஆண் பாவம் பொல்லாதது” என்ற திரைப்படத்தில் ரியோ நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் அட்டகாசமான டிரைலர் கடந்த 3 ஆம் தேதி வெளியாகியிருந்தது. ஆணாக பிறக்கும் ஒருவன் எப்படி எப்படி எல்லாம் அல்லோலப்படுகிறான்? ஆண் வர்க்கம் ஒரு சபிக்கப்பட்ட வர்க்கம்? என்ற கருத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட ஒரு காமெடி டிராமா திரைப்படம் இது. இத்திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இத்திரைப்படத்தை கலையரசன் என்பவர் இயக்கியுள்ளார்.
கதை திருட்டு விவகாரம்
இந்த நிலையில் இராம்குமார் ராமலிங்கம் என்ற உதவி இயக்குனர், “ஆண் பாவம் பொல்லாதது” திரைப்படத்தின் கதை தன்னுடைய கதை என்று குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள அவர், “என்ன சொல்வதென்று தெரியவில்லை. மிகவும் வருத்தத்தில் இருக்கிறேன். நான் இரண்டு வருடங்களுக்கு முன்பு தயார் செய்த கதையும் திரைக்கதையும் அப்படியே இன்னொரு இயக்குனரால் படமாக்கப்பட்டுள்ளது. அந்த படத்தின் போஸ்டர் வெளியான போதே சந்தேகித்தேன். ஆனால் வேறு கதையாக இருக்கும் என்று தாண்டிச் சென்றுவிட்டேன்.
ஆனால் இன்று இத்திரைப்படத்தின் முன்னோட்டத்தைப் பார்த்தபோது அதிர்ச்சியடைந்தேன். நான் ஆண் பாவம் என்று வைக்கப்பட்ட தலைப்பு ஆண் பாவம் பொல்லாதது என அவர்களால் வைக்கப்பட்டுள்ளது. இதைக் கேட்டால் ஒத்த சிந்தனை என்று சொல்வார்கள். ஒத்த சிந்தனையாக இருந்தாலும் அப்படியே அப்பட்டமாக நான் எழுதிய வசனங்கள் முன்னோட்டத்தில் உள்ளது. ஆதரமாக எனக்கு நானே மின்னஞ்சல் செய்த ஸ்கிரிப்ட் மட்டுமே உள்ளது. நம்பிக்கையுள்ள நண்பர்களுக்கு மட்டுமே முழு திரைக்கதையும் விவரித்து இருக்கிறேன். பள்ளி, கல்லூரி, காதல், ஐடி வேலை, மனைவியின் டார்ச்சர், குழந்தை, கிரெடிட் கார்டு மற்றும் கடன் என ஒரு ஆண் தன் வாழ்நாள் முழுவதும் சந்திக்கும் பிரச்சனைகளை நகைச்சுவையாக எழுதியிருக்கிறேன்.
நான் கனவுகளோடு எழுதப்பட்ட கதையும் திரைக்கதையும் இயக்குனரின் சொந்த சிந்தனை என்றால் வரவேற்கலாம். ஆனால் திருடப்பட்டதென்றால் இன்று தப்பித்தாலும் அதன் பலனை கண்டிப்பாக ஒரு நாள் அனுபவிப்பார். யார நம்புறதுனே தெரில தாஸ் அண்ணா” என்று மிகவும் மனம் உடைந்து பகிர்ந்துள்ளார். “நிச்சயமாக உங்களுக்கு நீதி கிடைக்கும்” என்று பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.