கலாச்சாரத்தை நாங்கள் காப்பாற்ற தேவையில்லை?- சர்ச்சையை கிளப்பிய பேட் கேர்ள் பட இயக்குனர்!
Author: Prasad1 September 2025, 7:09 pm
பேட் கேர்ள் படத்திற்கு எதிர்ப்பு
வெற்றிமாறன்-அனுராக் காஷ்யப் ஆகியோரின் தயாரிப்பில் வர்ஷா பரத் என்ற பெண் இயக்குனர் இயக்கியுள்ள திரைப்படம்தான் “பேட் கேர்ள்”. இத்திரைப்படத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூண் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு அமித் திரிவேடி இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன்பு வெளியான நிலையில் பல சர்ச்சைகளை கிளப்பியது. ஒரு டீனேஜ் பெண்ணின் ஆசைகள் மற்றும் இச்சைகளை மையப்படுத்த இத்திரைப்படம் அமைந்துள்ளது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் சம்பந்தப்பட்ட ஆபாச காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இத்திரைப்படத்தின் டீசர் இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது.

அது மட்டுமல்லாது இத்திரைப்படத்தின் சில காட்சிகளை மத்திய தணிக்கை வாரியம் நீக்கச்சொல்லியது. இதன் காரணமாக தயாரிப்பாளர் வெற்றிமாறன் நீதிமன்ற படிகளை ஏறினார். அந்த வகையில் ஒரு வழியாக இத்திரைப்படம் பல எதிர்ப்புகளுக்கு மத்தியில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டியதில்லை
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய இயக்குனர் வர்ஷா பரத், “பேட் கேர்ள் படத்தின் டீசரை பார்த்துவிட்டு எங்களால் கலாச்சாரம் சீரழிகிறது என்கிறார்கள். கலாச்சாரம்தான் பெண்களை பாதுகாக்க வேண்டும். கலாச்சாரத்தை பெண்கள் காப்பாற்ற வேண்டிய தேவையில்லை. அது பெண்களின் வேலையும் அல்ல. கடவுளும் கலாச்சாரமும்தான் பெண்களை காக்க வேண்டும்” என கூறியுள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது.

“பேட் கேர்ள்” திரைப்படம் ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
