பேசாம பேசாமயே இருந்திருக்கலாம்- வாண்டடாக வாய் கொடுத்து புண்ணாக்கிக்கொண்ட விஜய் தேவரகொண்டா?
Author: Prasad23 June 2025, 10:48 am
விஜய் தேவரகொண்டாவின் சர்ச்சை பேச்சு
கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் நாட்டையே உலுக்கியது. இத்தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தது ஒவ்வொரு இந்தியர்களையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய அரசு ஆப்ரேஷன் சிந்தூரை களமிறக்கியது. இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்தது. மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்த இப்போர் அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின் ஒரு கட்டத்தில் அமைதி கண்டது.
இந்த பயங்கரவாத தாக்குதலை அரசியல் பிரபலங்கள் முதல் சினிமா பிரபலங்கள் வரை பலரும் கண்டித்து வந்தனர். அந்த வகையில் விஜய் தேவரகொண்டா “ரெட்ரோ” திரைப்பட விழாவின் போது பஹல்காம் தாக்குதலையும் பழங்குடியின தாக்குதலையும் ஒப்பிட்டுப் பேசினார். அவர் அவ்வாறு பேசியது எதிர்ப்பலைகளை கிளப்பியது. விஜய் தேவரகொண்டா பழங்குடியினரை அவமதித்து பேசியுள்ளார் என கண்டனங்கள் கிளம்பியது. இந்த கண்டனங்களை தொடர்ந்து விஜய் தேவரகொண்டா தனது பேச்சுக்கு மன்னிப்பும் கேட்டுக்கொண்டார்.

SC/ST வழக்கு…
இந்த நிலையில் பழங்குடியின சமூகங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் மாநில தலைவரான அசோக் ரத்தோட் இது குறித்து புகார் அளித்திருந்த நிலையில் தற்போது விஜய் தேவரகொண்டா மீது SC/ST வன்கொடுமை சட்டத்தின் கிழ் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இச்செய்தி தெலுங்கு சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் தேவரகொண்டா தற்போது “Kingdom” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படம் ஜூலை 4 ஆம் தேதி வெளியாகவுள்ளது.