வெற்றிமாறன் படத்தை நிராகரித்த சென்சார் போர்டு; நீதிமன்றத்தில் வழக்குத்தொடுத்த தயாரிப்பாளர்!
Author: Prasad3 June 2025, 5:57 pm
வெற்றிமாறன் தயாரிப்பு
வெற்றிமாறன் பல திரைப்படங்களை இயக்கி வருகிறார் என்றாலும் பல வருடங்களாகவே தமிழில் தனது கிராஸ்ரூட் பிலிம் கம்பெனி என்ற நிறுவனத்தின் மூலம் பல திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார். அந்த வகையில் ஆண்ட்ரியாவின் “மனுஷி” என்ற திரைப்படத்தை வெற்றிமாறன் தயாரித்துள்ளார். கோபி நயினார் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
“மனுஷி” திரைப்படத்தின் டிரெயிலர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியானது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இத்திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சான்று வழங்க மறுத்தது.

மாநில அரசை கேவலமாக சித்தரிக்கும் படம்?
அதாவது “மனுஷி” திரைப்படம் மாநில அரசை கேவலமாக சித்தரித்து எடுக்கப்பட்டுள்ளதாக கூறி சென்சார் சான்றிதழ் வழங்க சென்சார் போர்டு மறுத்தது. மேலும் கம்யூனிச சித்தாந்தத்தை இத்திரைப்படம் தவறாக காட்டுவதாகவும் கூறப்பட்டது. இதனை தொடர்ந்து இத்திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என வெற்றிமாறன் சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் வெற்றிமாறன் அளித்த மனுவில், “நான் தயாரித்த திரைப்படத்திற்கு சென்சார் போர்டு சென்சார் சான்றிதழ் அளிக்க மறுப்பு தெரிவித்து உத்தரவிடும் முன்பு எனது தரப்பு வாதத்தை கூற அவர்கள் எனக்கு வாய்ப்பளிக்கவில்லை” என அதில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தை நிபுணர் குழுவை கொண்டு மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டிடம் தான் வைத்த கோரிக்கையின் மீது உத்தரவை பிறப்பிக்க நீதிமன்றம் சென்சார் போர்டுக்கு உத்தரவிட வேண்டும் எனவும் அதில் கேட்டுக்கொண்டுள்ளார்.
“கருத்து சுதந்திர எல்லைக்குள் வராத காட்சிகளாக நிர்ணயிக்கப்படும் எந்த காட்சிகளாக இருந்தாலும் அக்காட்சிகளை திரைப்படத்தில் இருந்து நீக்க தயாராக உள்ளேன்” எனவும் வெற்றிமாறன் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
வெற்றிமாறனின் மனுவை நேற்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரிப்பதாக இருந்த நிலையில் நேற்று நீதிமன்ற அலுவல் நேரம் முடிவடைந்த காரணத்தினால் அம்மனுவை வரும் புதன்கிழமை விசாரிக்க பட்டியலிடப்பட்டுள்ளது.
கோபி நயினார் இயக்கத்தில் உருவான “மனுஷி” திரைப்படத்தில் ஆண்ட்ரியா முன்னணி கதாநாயகியாக நடித்துள்ள நிலையில் இவருடன் நாசர், பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பயங்கரவாதி என்று சந்தேகம் கொண்டு ஒரு பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வருகிறார்கள். அந்த பெண்ணை காவலர்கள் பலரும் துன்புறுத்துகிறார்கள். இதுதான் இத்திரைப்படத்தின் மையக்கரு என தெரிய வருகிறது.