கெட்ட வார்த்தை பேசுனா தப்பா? விமர்சகர் பிரசாந்தை சீண்டி பார்த்த நடிகர் மகேந்திரன்… களேபரமான நீயா நானா!
Author: Prasad9 June 2025, 2:15 pm
விமர்கர்கள் VS அதை எதிர்ப்பவர்கள்
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் “நீயா நானா” நிகழ்ச்சி 15 வருடங்களுக்கும் மேலாக ரசிகர்களிடயே மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சியாகும். ஒவ்வொரு வாரமும் ஒரு தலைப்பை எடுத்துக்கொண்டு அதனை ஆதரித்து பேசும் தரப்பையும் அதனை எதிர்த்து அல்லது விமர்சித்து பேசும் தரப்பையும் வைத்து விவாதம் நடத்துவதே இந்நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சி பல்வேறு துறை குறித்த பல விஷயங்கள் விவாதத்திற்குள்ளாக்கப்படும். அந்த வகையில் இந்த வாரம் “நீயா நானா” நிகழ்ச்சியில் சினிமா விமர்சனங்களை குறித்த விவாதம் நடைபெற்றது.
இதில் ஒரு தரப்பில் பிரபல சினிமா விமர்சகர்களும் எதிர்தரப்பில் சினிமா விமர்சகர்களை விமர்சனம் செய்பவர்களும் அமர்ந்திருந்தனர். இதில் சினிமா விமர்சகர்களின் தரப்பில் பிரபல சினிமா விமர்சகர்களான பிரசாந்த், அபிஷேக் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். எதிர்தரப்பில் சினிமாத் துறையைச் சேர்ந்த இயக்குனர்களும் நடிகர்களும் கலந்துகொண்டனர்.
கெட்ட வார்த்தை பேசுனா தப்பா?
இதில் எதிர்தரப்பில் அமர்ந்திருந்த நடிகர் மகேந்திரன் “திரைப்படங்களை பொறுத்தவரை அதில் பல பேரின் உழைப்பு இருக்கிறது. பார்வையாளர்களுக்காகத்தானே நாம் படம் எடுக்கிறோம். ஆனால் அந்த படம் பார்வையாளர்களிடம் சென்று சேர்வதற்கு முன்பே நீங்கள் அந்த படத்தை நன்றாக இல்லை என கூறிவிடுகிறீர்கள். அப்படி இருக்கையில் எப்படி பார்வையாளர்கள் திரையரங்கிற்கு வருவார்கள்?” என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேசிய அவர், “நான் லேபில் என்று ஒரு வெப் சீரீஸில் நடித்திருந்தேன். அப்போது ஒரு விமர்சகர் என்னை குறிப்பிட்டு ‘மகேந்திரன் என்ன இப்படி நடிச்சிருக்கான். கெட்ட வார்த்தை பேசி நடிச்சிருக்கான்’ என கூறினார். அது என்னை புண்படுத்திவிட்டது. நான் கிட்டத்தட்ட 6 மாதங்கள் பல பெண்மணிகளிடம் சென்று கேட்டேன். ‘நான் லேபிள் வெப் சீரிஸில் கெட்ட வார்த்தை பேசியிருக்கிறேன். அதை நீங்கள் எப்படி பார்க்கீறீர்கள்?’ என கேட்டேன். அவர்களில் 95% பேர் ‘கோபம் வந்தால் கெட்ட வார்த்தைதானே வாயில் வரும்’ என கூறினார்கள். அவர்கள் அவ்வளவு இலகுவாக எடுத்துக்கொண்ட விஷயத்தை நீங்கள் ஏன் தவறாக பேசுகிறீர்கள்?” என விமர்சகர்களை பார்த்து கேட்டார்.

அப்போது அதற்கு பதிலளித்த பிரபல சினிமா விமர்சகர் பிரசாந்த், “உங்களிடம் நான் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். ஒரு விமர்சகர் நீங்கள் எப்படி நடித்திருக்கிறீர்கள் என விமர்சனம் செய்யலாம். அதுதான் எல்லைக்கோடு. நீங்கள் யார் எப்படி வளர்ந்தீர்கள் என்று சொல்வதற்கெல்லாம் எனக்கோ யாருக்கோ உரிமை இல்லை. அதை செய்து உங்களை புண்படுத்தியிருந்தால் ஒரு விமர்சகராக உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்” என கூறினார். மகேந்திரன் பேசிய வீடியோ துணுக்குகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
