ஷங்கருடன் பணியாற்றியது மோசமான அனுபவம்- ஆதங்கத்தை கொட்டிய கேம் சேஞ்சர் எடிட்டர்!
Author: Prasad26 May 2025, 11:12 am
படுதோல்வியடைந்த ஷங்கர் படம்
தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்திய சினிமா உலகில் பிரம்மாண்டமான இயக்குனர் என்ற பெயரை பெற்றவர் ஷங்கர். ஆனால் சமீபகாலமாக இவரது திரைப்படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. குறிப்பாக இவர் இயக்கத்தில் வெளியான “இந்தியன் 2”, “கேம் சேஞ்சர்” போன்ற திரைப்படங்கள் படுதோல்வியடைந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய “கேம் சேஞ்சர்” திரைப்படத்தின் படத்தொகுப்பாளரான ஷமீர் முகமது, ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவம் என கூறியுள்ளார்.
மோசமான அனுபவம்
இது குறித்து அவர் பேசியபோது, “கடைசி 6 மாதங்களில் இன்னும் ஒரு மாதம் கூடுதலாக பணியாற்றவேண்டியது வரும் என கூறினார்கள். நான் பிற திரைப்படங்களிலும் ஒப்பந்தமாகியிருந்ததால் கேம் சேஞ்சரில் இருந்து வெளியே வந்துவிட்டேன். நான் அத்திரைப்படத்தில் எடிட்டராக பணியாற்றியபோது அத்திரைப்படம் 7 முதல் ஏழரை மணி நேரம் நீளம் கொண்டதாக இருந்தது. நான் அதனை மூன்றரை மணி நேரமாக குறைத்தேன். நான் வெளியேறிய பின் இந்த புராஜெக்டில் இணைந்த இன்னொரு எடிட்டர் இதனை 3 மணி நேரமாக குறைத்தார்” என கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், “ஷங்கருடன் பணியாற்றியது மிகவும் மோசமான அனுபவமாக இருந்தது. நான் மிகவும் ஆவலோடுதான் முதலில் பணியாற்றச்சென்றேன். ஆனால் அது வேறு மாதிரியாக இருந்தது. அவர் எடிட்டிங்கிற்காக ஒரு தேதியை முடிவு செய்வார். ஆனால் அந்த தேதியில் அவர் வரமாட்டார். பத்து நாட்கள் கழித்து வருவார். பல நாட்கள் இவ்வாறுதான் நடந்துகொண்டிருந்தது. இதனால் நான் 300 முதல் 350 நாட்கள் சென்னையிலேயே இருக்கவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிட்டது” எனவும் தனது ஆதங்கத்தை கொட்டியுள்ளார்.
“கேம் சேஞ்சர்” திரைப்படத்தில் இருந்து ஷமீர் முகமது வெளியேறியபின் படத்தொகுப்பாளர் ரூபன் எடிட்டராக இணைந்தார். எனினும் இத்திரைப்படம் படுதோல்வியடைந்தது.