பிரபல இயக்குநர் மாரடைப்பால் திடீர் மரணம்.. திரைத்துறையில் அடுத்தடுத்து சோகம்!
Author: Udayachandran RadhaKrishnan24 September 2025, 11:48 am
நடிகர் ரோபோ சங்கர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இன்னொரு துயரச் செய்தியாக இயக்குநர் மரணம் அமைந்துள்ளது.
தமிழ் திரைப்பட இயக்குநர் ஆர். டி. நாராயணமூர்த்தி மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 59. மறைந்த இயக்குநருக்கு மனைவி அம்சவேணி மற்றும் லண்டனில் பணிபுரியும் மகன் லோகேஸ்வரன் உள்ளனர்.
மகன் சென்னை திரும்பியதும் இறுதிசடங்குகள் நடைபெற உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமீபத்தில் நடிகர் ரோபோ சங்கர் மரணமடைந்த சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இன்னொரு துயரச் செய்தியாக இயக்குநர் நாராயணமூர்த்தியின் மரணம் திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெஞ்சுவலி காரணமாக நேற்று இரவு 8.30 மணியளவில் அவர் காலமானார். கடந்த ஒரு வாரமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனளிக்காமல் உயிரிழந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இயக்குநராக நாராயணமூர்த்தி 2001 ஆம் ஆண்டு ‘மனதை திருடிவிட்டாய்’ திரைப்படத்தை எழுதி இயக்கினார். பிரபுதேவா, கௌசல்யா, காயத்ரி ஜெயராம், விவேக், வடிவேலு, ஸ்ரீமன் உள்ளிட்டோர் நடித்த அந்த படம், யுவன் சங்கர் ராஜா இசையில் வெளிவந்து ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

பின்னர் அவர் ‘ஒரு பொண்ணு ஒரு பையன்’ திரைப்படத்தையும் இயக்கி, அதன் பின்னர் தொலைக்காட்சி தொடர்களை இயக்கி வந்தார்.
இயக்குநர் நாராயணமூர்த்தியின் மறைவிற்கு தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
