இப்படி எல்லாம் கேட்டா செம கோபம் வரும்- பத்திரிக்கையாளர்களை தாறுமாறாக திட்டிய இளையராஜா!
Author: Prasad3 June 2025, 12:21 pm
தமிழ்நாட்டில் அரங்கேறப்போகும் சிம்பொனி
மூன்று தலைமுறை ரசிகர்களை தனது இசையில் கட்டிப்போட்டுள்ள இசைஞானி இளையராஜா கடந்த மார்ச் மாதம் லண்டனில் “வேலியண்ட்” என்ற தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிற்கே பெருமை சேர்த்தார். அந்த வகையில் நேற்று தனது 82 ஆவது பிறந்தநாளில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த இளையராஜா தான் லண்டனில் அரங்கேற்றிய சிம்பொனியை அதே ஃபிலார்மோனிக் ஆர்கெஸ்ட்ராவுடன் இணைந்து வருகிற ஆகஸ்து மாதம் 2 ஆம் தேதி தமிழகத்தில் அரங்கேற்றவுள்ளதாக தெரிவித்தார். இது ரசிகர்கள் பலரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. மேலும் அதில் பேசிய இளையராஜா, தமிழக முதல்வர் முக ஸ்டாலின் தனக்கு வாழ்த்துகளை தெரிவித்த செய்தியையும் கூறினார்.

கடுப்பான இளையராஜா
இப்பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிவடைந்த பின் பத்திரிக்கையாளர்களில் ஒருவர், “தமிழக அரசின் இந்த முயற்சியை எப்படி பார்க்கிறீர்கள்?” என கேட்டார். அதற்கு சட்டென கோபப்பட்ட இளையராஜா, “இப்படிபட்ட கேள்வியை என்னிடம் கேட்கக்கூடாது. நான் அறிவிக்க வேண்டியதை அறிவித்துவிட்டேன். அதோடு முடித்துக்கொள்ளலாம். நீங்கள் அதில் ஒரு கேள்வி கேட்பீர்களா?

இதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று கேட்கிறீர்கள். எப்படி பார்க்கவேண்டும்? என்று நான் பதிலுக்கு கேட்டால் அவர் கோபமாக பேசுகிறார் என்று கூறுகிறீர்கள். எதற்கு இதெல்லாம். நல்ல செய்தியைச் சொல்லி இருக்கிறேன். சந்தோஷமாக போங்களேன்” என்று இறுதியில் சாந்தமாக கூறி அங்கிருந்து நகர்ந்தார்.
“இவர் எப்போதும் ஆணவமாகவும் திமிராகவும் பேசக்கூடியவர்” என இளையராஜா மீது பலரும் விமர்சனம் வைப்பது வழக்கம். எனினும் அவர் இப்படி பேசுவதுதான் நியாயமான பேச்சு என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.
இளையராஜா 50 ஆண்டுகள் தனது திரை பயணத்தை நிறைவு செய்துள்ள நிலையில் இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடத்த தமிழக அரசு அவரது பிறந்தநாளில் திட்டமிட்டிருந்தது. ஆனால் சில காரணங்களால் அந்த விழா தள்ளிப்போயுள்ளதாக கூறப்படுகிறது.