விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இளையராஜா இதனை செய்வாரா? திடீர் கேள்வி கேட்ட ரசிகர்!
Author: Prasad13 June 2025, 11:22 am
கோர விபத்து
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா AI171 போயிங் விமானம், நேற்று மதியம் 1.38 மணியளவில் லண்டனுக்கு கிளம்பியது. இவ்விமானம் புறப்பட்ட 5 நிமிடங்களில் தனது கட்டுப்பாட்டை இழந்து விமான நிலையத்திற்கு அருகே இருந்த ஒரு மருத்துவர் விடுதி மீது விழுந்தது.

இந்த விபத்தில் இவ்விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் என்ற 40 வயது மதிக்கத்தக்க ஒரே ஒரு நபர் மட்டும் உயிர் தப்பினார். இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இவ்விமானத்தில் உள்ள கருப்பு பெட்டியை தேடும் பணிகள் தீவிரமடைந்துள்ளது.
விமான விபத்து நடந்த பகுதியை இன்று காலை பிரதமர் மோடி பார்வையிட்டார். விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 கோடி வழங்கப்படும் என ஏர் இந்தியா உரிமையினரான டாடா நிறுவனம் அறிவித்துள்ளது.
இளையராஜா இரங்கல்
இந்த கோர விபத்தில் பலர் பலியான நிலையில் பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசைஞானி இளையராஜா தனது எக்ஸ் தளத்தில், “அகமதாபாத்தில் நடந்த கோர சம்பவம் என்னை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் தங்களது அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். இந்த கோர சம்பவத்தால் பாதிப்புக்குள்ளான ஒவ்வொரு நபருக்காகவும் நான் பிரார்த்தித்துக்கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.
I am deeply shocked and saddened by the tragic incident in Ahmedabad. My heartfelt condolences to the families who lost their loved ones. May the souls of the departed rest in peace. I pray for strength and healing to everyone affected by this tragedy.
— Ilaiyaraaja (@ilaiyaraaja) June 12, 2025
இளையராஜா இரங்கல் தெரிவித்துள்ள எக்ஸ் பதிவில் ரசிகர் ஒருவர், “விபத்தில் இறந்தவர்களுக்காக நீங்கள் திருவண்ணாமலையில் மோட்ச தீபம் ஏற்றுவீர்கள் என நம்புகிறேன்” என கூறியுள்ளார்.