கங்கை அமரன் மட்டும் என்ன யோக்கியமா? சின்மயி-வைரமுத்து விவகாரத்தில் கடுப்பான பிரபலம்!
Author: Prasad10 June 2025, 4:20 pm
சின்மயி-வைரமுத்து விவகாரம்
கடந்த 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி, வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியது தமிழ் திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த புகாரைத் தொடர்ந்து வைரமுத்துவிற்கு திரைப்பாடல்கள் எழுதுவதற்கான வாய்ப்புகள் குறைந்துப்போனது. மேலும் பாடகி சின்மயி டப்பிங் யூனியனில் தடை செய்யப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழ் திரைப்பாடல்களை பாடுவதற்கான வாய்ப்பும் இல்லாமல் போனது.

இதனிடையே “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் சின்மயி “முத்த மழை” பாடலை பாடியது பலரையும் ஈர்த்த நிலையில் ஒரு பிரபல யூட்யூப் சேன்னல் சின்மயிக்கு Fans Festival நடத்தியது. இதில் ஒரு பகுதியாக இயக்குனரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் கலந்துகொண்டார்.
வைரமுத்து நல்ல மனிதர் இல்லை…
அப்போது சின்மயிக்கு ஆதரவாக பேசிய கங்கை அமரன், “வைரமுத்து நல்ல கவிஞர் என்பதை ஒப்புக்கொள்கிறோம். ஆனால் அவர் நல்ல மனிதர் இல்லை” என்று கூறினார். மேலும் பேசிய அவர், “வைரமுத்து தொடக்க காலகட்டத்தில் எனக்கு நண்பராக இருந்திருந்தாலும் தவறு செய்தால் நிச்சயம் கேட்க வேண்டும்” எனவும் கூறினார்.
கங்கை அமரனின் இந்த பேட்டி வைரலாகி வரும் நிலையில் பத்திரிக்கையாளர் அந்தணன் தனது வீடியோ ஒன்றில் இது குறித்து பேசியபோது, “சின்மயி இந்த பிரச்சனையை தீர்வுக்கு கொண்டு வராமல் சந்தர்ப்பம் கிடைக்கும்போது எல்லாம் வைரமுத்து மீது சாணி வாரி அடிப்பது மிகவும் கஷ்டமாக இருக்கிறது. சின்மயி விஷயத்தில் சின்மயி என்ன வேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். ஏனென்றால் பாதிக்கப்பட்டவர் அவர். ஆனால் யார் யாரையோ அழைத்து வந்து பேச வைப்பது மிகவும் தவறான செயல்.
சின்மயி தினந்தோறும் கூட வைரமுத்துவை திட்டலாம். அதற்கு அவருக்கு உரிமை இருக்கிறது. ஆனால் தன்னுடன் யார் யாரையோ உட்கார வைத்து பேசுகிறீர்களே, அவர்கள் எல்லாம் யோக்கியமானவர்களா என்று ஒரு கேள்வி இருக்கிறதுதானே.
அந்த நிகழ்ச்சி பிரமாதமாக வந்திருக்க வேண்டிய நிகழ்ச்சி. ஆனால் அங்கே தேவையில்லாமல் ஒரு ஆளை அழைத்து வந்து அவரை வைத்து திட்ட வைப்பது சரியில்லை. அந்த நபருடன் பழகிய ஆட்கள் எத்தனை பேர் யோக்கியவான்கள் என்ற கேள்வி உள்ளது. ஒரு மாபெரும் கவிஞர், அவர் மகளுடைய வாழ்க்கை இன்று சின்னாபின்னமாகிப் போனதற்கு காரணம் யார் என்று கங்கை அமரனுக்குத் தெரியாதா என்ன? ஒரு பெரிய இசையமைப்பாளர் ஒருவரின் தம்பி, அவரை பார்த்து பேட்டி எடுக்க ஒரு பெண் வருகிறார். அந்த பெண்ணையே அவர் கூட வைத்துக்கொண்டார். இதை நான் எங்குப்போய் சொல்வது.
உங்களில் யார் யோக்கியவான், அவனே கல்லெறியட்டும் என்று பைப்பிளில் கூறியிருப்பது போல் உங்களில் யார் யோக்கியவான், சின்மயியை ஆதரிப்பதற்கு?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். அந்தணனின் இந்த ஆதங்கமான பேட்டி ரசிகர்களிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.