ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த காந்தாரா நடிகர்! அதிர்ச்சியில் திரையுலகம்…
Author: Prasad9 May 2025, 12:37 pm
மரண ஹிட்
2022 ஆம் ஆண்டு கன்னடத்தில் வெளிவந்த “காந்தாரா” திரைப்படம் கன்னடத்தில் மட்டுமல்லாது இந்திய அளவிலும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. பழங்குடியின தெய்வ வழிபாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட கதையம்சத்துடன் வெளிவந்த இத்திரைப்படம் இந்திய ரசிகர்களுக்கு மிகவும் வித்தியாசமான உணர்வை தந்தது.

குறிப்பாக இத்திரைப்படத்தில் இடம்பெற்ற வராக ரூபம் பாடல் அனைவரையும் கவர்ந்தது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த இத்திரைப்படம் ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்டது. ஆனால் இத்திரைப்படம் ரூ.500 கோடி வசூலை தொட்டது. கேஜிஎஃப் படத்தை தயாரித்த ஹொம்பாலே நிறுவனம்தான் இத்திரைப்படத்தையும் தயாரித்தது.
காந்தாரா சேப்டர் 1
“காந்தாரா” திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து இதன் தொடர்ச்சியாக “காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் உருவாகி வருகிறது. இத்திரைப்படத்தையும் ஹொம்பாலே நிறுவனமே தயாரித்து வரும் நிலையில் “காந்தாரா” திரைப்படத்தை இயக்கி நடித்த ரிஷப் ஷெட்டியே இத்திரைப்படத்தையும் இயக்கி இதில் நடித்தும் வருகிறார்.

மேலும் இவருடன் ஜெயராம், கிஷோர், ஜெயசூர்யா உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இத்திரைப்படத்தில் நடித்த நடிகர் ஒருவர் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது இத்திரைப்படத்தில் துணை நடிகராக நடித்து வந்த எம் எஃப் கபில் என்ற நடிகர் கொல்லூர் சௌபர்ணிகா ஆற்றில் நீராடச் சென்றபோது ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டார். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புப் படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு கபில்லின் உடலை கண்டுபிடித்தனர். இச்சம்பவம் படப்பிடிப்பு நடைபெற்றபோது நடந்ததாக செய்திகள் வெளிவந்ததால் இத்திரைப்படத்தின் இயக்குனர் ரிஷப் ஷெட்டி மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின.
மறுப்பு தெரிவித்த தயாரிப்பு நிறுவனம்
இந்த நிலையில் இத்திரைப்படத்தின் ஹொம்பாலே நிறுவனம் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், “எம் எஃப் கபிலின் குடும்பத்திற்கு நாங்கள் எங்களது இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். எனினும் இச்சம்பவம் படப்பிடிப்பு சமயத்தில் நடைபெறவில்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்த விரும்புகிறோம். அன்றைய நாள் படப்பிடிப்பு நடைபெறவே இல்லை. அவர் இறப்பிற்கு படப்பிடிப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என விளக்கம் கொடுத்துள்ளது. இச்சம்பவம் படக்குழுவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.