வேறு நடிகரின் படத்தை பாராட்டிய மேனேஜருக்கு அடி உதை- வழக்கில் சிக்கிய பிரபல மலையாள நடிகர்…
Author: Prasad27 May 2025, 1:01 pm
உன்னி முகுந்தன்
தமிழில் “சீடன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் உன்னி முகுந்தன். இதனை தொடர்ந்து மலையாள சினிமா உலகில் பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடிக்கத் தொடங்கினார். தற்போது மலையாள சினிமா உலகின் முன்னணி கதாநாயகராக வளர்ந்துள்ளார் உன்னி முகுந்தன். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான “மார்கோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

மேனேஜரை அடித்த உன்னி முகுந்தன்
இந்த நிலையில் வேறு ஒரு நடிகரின் திரைப்படத்தை புகழ்ந்ததற்காக தன்னை உன்னி முகுந்தன் தாக்கியதாக போலீஸில் புகார் அளித்துள்ளார் உன்னி முகுந்தனின் மேனேஜர் விபின் குமார்.
உன்னி முகுந்தனின் மேனேஜரான விபின் குமார், டொவினோ தாமஸ் நடிப்பில் கடந்த 23 ஆம் தேதி வெளியான “நரிவேட்டா” திரைப்படத்தை புகழ்ந்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக உன்னி முகுந்தன் விபின் குமாரை தாக்கியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இது குறித்து கேரளாவின் திரிக்கக்கரா காவல் நிலையத்தில் விபின் குமார் அளித்த புகாரில், உன்னி முகுந்தன் அவரது அபார்ட்மெண்ட்டின் பார்க்கிங் பகுதியில் வைத்து தன்னை தாக்கியதாக கூறியுள்ளார். மேலும் தன்னை கொன்று விடுவதாக மிரட்டியதாகவும் அப்புகாரில் விபின் குமார் குறிப்பிட்டுள்ளார்.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த பிப்ரவரி மாதம் வெளியான “கெட் செட் பேபி” என்ற திரைப்படம் சரியாக போகவில்லை என்பதால் அவர் மிகவும் விரக்தியில் இருந்ததாகவும் அவரிடம் பணியாற்றும் ஊழியர்களிடம் அவர் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாகவும் புகார் எழுந்துள்ளது.விபின் குமார் அளித்த புகாரை தொடர்ந்து உன்னி முகுந்தனின் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் மலையாள சினிமா உலகை பரபரப்புக்குள்ளாக்கியுள்ளது.