ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ
Author: Prasad14 June 2025, 7:02 pm
டாக்டர் அட்லீ
சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”, “தெறி”, “மெர்சல்”, “பிகில்” ஆகிய வெற்றித் திரைப்படங்களை கொடுத்த அட்லீ அதனை தொடர்ந்து ஷாருக்கானை வைத்து பாலிவுட்டில் “ஜவான்” என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தார். இத்திரைப்படம் ரூ.1000 கோடிகளுக்கும் மேல் வசூல் அள்ளியது. இந்திய சினிமாவே திரும்பிப் பார்க்கும் வெற்றியாக அது அமைந்தது.
இவ்வாறு சினிமாத் துறையில் சாதனைகளை நிகழ்த்திய இயக்குனர் அட்லீக்கு இன்று சத்யபாமா பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை அளித்துள்ளது. அட்லீ சத்யபாமா பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவரும் ஆவார். அந்த வகையில் தனது கல்லூரி அனுபவத்தையும் மேடையில் பகிர்ந்துகொண்டார்.
ராயப்பன் கேரக்டர் உண்மை கதாபாத்திரம்
அட்லீ மேடையில் பேசுகையில், “பொதுவாக நான் இயக்கும் திரைப்படங்களின் காட்சிகளை பல படங்களில் இருந்து காப்பி அடித்ததாக கூறுவார்கள். ஆனால் நான் ஒரு உண்மையை சொல்கிறேன். நான் என் வாழ்க்கையில் நான் பார்த்த விஷயங்களில் இருந்துதான் நான் எடுத்திருக்கிறேன்.
ஒரு உதாரணத்திற்குச் சொல்ல வேண்டும் என்றால் பிகில் படத்தில் ராயப்பன் கதாபாத்திரத்தை என்னுடைய தலைவர் ஜேபியார் சார்-ஐ பார்த்துதான் வடிவமைத்தேன். உங்களில் பல பேருக்கு அவரை பார்ப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது. ஆனால் ஒரு சிங்கத்தை பார்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்திருந்தால் அவரை பார்த்திருக்கலாம். ஏனென்றால் அவர் பேசும் விதத்திலும் நிற்கும் விதத்திலும் ஒரு கண்ணியமும் கம்பீரமும் இருக்கும்.
அவரை போல் விளையாட்டை ஊக்கவிக்கக்கூடிய நபரை பார்க்கவே முடியாது. இன்று பல விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் இருந்து சென்றதற்கு காரணம் ஜேப்பியார்தான்” என்று கூறினார். இவர் பேசியது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.