தேவதை குளித்த துளிகளை அள்ளி… பிரபல நடிகை குளித்த நீரால் உருவான சோப்பு? லைன் கட்டி நிற்கும் ரசிகர்கள்!
Author: Prasad9 June 2025, 7:48 pm
ஜீன்ஸ் பட பாடல்
பிரசாந்த் நடித்த “ஜீன்ஸ்” திரைப்படத்தில் அன்பே அன்பே கொல்லாதே என்று ஒரு பாடல் இடம்பெற்றிருக்கும். அதில் “தேவதை குளித்த துளிகளை அள்ளி தீர்த்தம் என்றே நான் குளிப்பேன்” என்று வைரமுத்து ஒரு வரி எழுதியிருப்பார். அந்த வரியை கிட்டத்தட்ட ரியாலிட்டிக்கு கொண்டு வந்துள்ளார் ஒரு ஹாலிவுட் நடிகை. ஆம்!
சிட்னி ஸ்வீனி
2009 ஆம் ஆண்டு “ZMD” என்ற திரைப்படத்தின் மூலம் ஹாலிவுட்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகைதான் சிட்னி ஸ்வீனி. அதனை தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அதன் பின் கதாநாயகியாக வலம் வரத் தொடங்கினார். தனது கவர்ந்திழுக்கும் அழகால் இளம் ஆண்களை தன்வசப்படுத்தினார் சிட்னி ஸ்வீனி.

தற்போது 27 வயதில் இளம் பதுமையாக வலம் வரும் சிட்னி ஸ்வீனி சமீபத்தில் தனது ஆண் ரசிகர்களுக்கு ஒரு இன்பமான செய்தியை வெளியிட்டிருந்தார். அதாவது தான் குளித்த நீரை பயன்படுத்தி பல சோப்புகளை தயாரித்து அதனை விற்பனைக்குக் கொண்டு வர உள்ளதாகவும் குறிப்பாக இது ஆண்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் சோப்பு எனவும் அறிவித்தார். இந்த சோப்பை முகர்ந்தால் தன்னுடைய உடலின் வாசனை வரும் எனவும் சிட்னி ஸ்வீனி கூற, இளம் ஆண்களின் மனதில் குதிரை ஓடியது.
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிட்னி ஸ்வீனி குளித்த நீரால் தயாரான சோப்புகள் ஆன்லைனில் விற்பனைக்கு வந்தன. ஒரு சோப்பின் விலை 8 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டன. இந்திய மதிப்பின்படி ரூ.680. டாக்டர் ஸ்குவாச் என்ற அழகு சாதன பொருட்கள் மற்றும் குளியல் சோப்பு தயாரிக்கும் நிறுவனம் இந்த சோப்பை தயாரித்துள்ளது. இந்த சோப்புக்கு “Sydney Water Bath Bliss” என்று பெயரிடப்பட்டது. இந்த சோப்பு உண்மையாகவே சிட்னி ஸ்வீனி குளித்த நீரினால் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காகவே சிட்னி ஸ்வீனி பல மாதங்களாக தான் குளித்த நீரை தேக்கி வைத்திருந்தாராம்.
விற்றுத்தீர்ந்த சோப்புகள்
முதற்கட்டமாக 5000 சோப்புகளே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அந்த 5000 சோப்புகளில் 100 சோப்புகள் தனது ரசிகர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் எனவும் சிட்னி ஸ்வீனி கூறியிருந்தார். இந்த நிலையில் முதற்கட்டமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 5000 சோப்புகளும் கன நொடிகளில் விற்றுத் தீர்ந்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த சோப்புகளை விலைக்கு வாங்கிய பலரும் இந்த சோப்பை ஆன்லைன் மூலம் மறுவிற்பனை செய்தார்களாம். அந்த மறு விற்பனையான சோப்புகள் ரூ.25,000க்கு ஆன்லைனில் விற்பனையாகி வருகிறதாம்.
எதற்காக இந்த சோப்பு விற்பனை?
சிட்னி ஸ்வீனி டாக்டர் ஸ்குவாச்சின் அழகு சாதன பொருட்கள் மற்றும் வாசனை சோப்புகள் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மாடலாக உள்ளார். ஆதலால் தனது நிறுவனத்தின் மார்க்கெட்டை உயர்த்த டாக்டர் ஸ்குவாச் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டதாக கூறுகின்றனர். எனினும் சிட்னி ஸ்வீனியின் ரசிகர்கள் அடுத்த கட்டமாக எப்போது சோப்புகள் விற்பனைக்கு வரும் என ஆவலோடு காத்திருக்கின்றனர்.