சூர்யாவுக்கு பதில் சொல்லாமல் மழுப்பிய வெற்றிமாறன்? வாடிவாசல் டிராப் ஆனதுக்கு இதான் காரணமா?
Author: Prasad6 June 2025, 6:20 pm
டிராப் ஆன வாடிவாசல்
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” திரைப்படத்திற்கான அறிவிப்பு மூன்று ஆண்டுகளுக்கு முன்பே வெளிவந்தது. ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமலே இருந்தது. இதற்கிடையில் சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டார்.

இத்திரைப்படங்களின் வெளியீட்டிற்குப் பிறகாவது “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குமா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது இத்திரைப்படம் டிராப் ஆகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் இத்திரைப்படம் டிராப் ஆனதற்கான காரணம் குறித்தான ஒரு தகவல் வெளிவந்துள்ளது.
மழுப்பிய வெற்றிமாறன்
அதாவது வெற்றிமாறனை அழைத்த சூர்யா, “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு எத்தனை நாட்கள் போகும் என கேட்டாராம். அதற்கு வெற்றிமாறன் “படப்பிடிப்பை முதலில் தொடங்கலாம். அது எப்போது முடிகிறதோ அப்போது முடியட்டும்” என்று மழுப்பலான ஒரு தெளிவில்லாத பதிலை கூறினாராம்.
ஆனால் சூர்யாவோ, “இரண்டு வருடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை உங்களால் முடிக்க முடியுமா?” என்று கேட்டாராம். மேலும் “இத்திரைப்படத்தை ஒரு பாகமாகவே முடித்துவிட வேண்டும், இரண்டு பாகங்கள் எடுக்கக்கூடாது” எனவும் கூறினாராம்.
இவ்வாறு “படப்பிடிப்பை எப்போது தொடங்கி எப்போது முடிப்பீர்கள்? என்று தெளிவான ஒரு முடிவை கூறுங்கள், அதன் பின் நான் கால்ஷீட் நாட்களை தருகிறேன்” என சூர்யா கூறினாராம். ஆனால் வெற்றிமாறன் எதற்குமே தெளிவான பதிலை கூறவில்லையாம். இதன் காரணமாகத்தான் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக பத்திரிக்கையாளர் அந்தணன் கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.