படத்திற்கு அனுமதி தந்தாலும் இனி ஒரு பயனும் இல்லை- கமல்ஹாசனுக்கு தலைக்கு மேல் தொங்கும் கத்தி!
Author: Prasad3 June 2025, 7:17 pm
தள்ளிப்போன தக் லைஃப் வெளியீடு
கமல்ஹாசன் “தமிழில் இருந்து கன்னட மொழி பிறந்தது” என பேசியதை தொடர்ந்து கர்நாடகாவைச் சேர்ந்த பல கன்னட அமைப்புகளும் அரசியல்வாதிகளும் கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் தனது பேச்சுக்கு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் , இல்லை என்றால் “தக் லைஃப்” திரைப்படம் கர்நாடகாவில் தடை செய்யப்படும் எனவும் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் கமல்ஹாசன் தன்னால் மன்னிப்பு கேட்க முடியாது என்று கூறிய நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தை கர்நாடகத்தில் வெளியிட கர்நாடக பிலிம் சேம்பர் தடை விதித்துள்ளது.
இந்த தடையை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார் கமல்ஹாசன். இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், “தமிழில் இருந்து கன்னடம் பிறந்தது என எந்த ஆதாரத்தின் அடிப்படையில் கூறினீர்கள். நீங்கள் வரலாற்று ஆய்வாளரா? அல்லது மொழியியல் வல்லுநரா? மன்னிப்பு கேட்காவிடில் கர்நாடகாவில் தக் லைஃப் படம் ஏன் வெளியாக வேண்டும் என நினைக்கிறீர்கள்? ரூ.300 கோடி செலவில் படம் எடுத்துள்ளதாக கூறும் நீங்கள் ஒரு மன்னிப்பு கேட்பதால் என்ன?” என்று கேள்வி எழுப்பியது.

இதனை தொடர்ந்து கர்நாடகா பிலிம் சேம்பரின் தலைவர் நரசிம்மலுவுக்காக ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டிருந்தார் கமல்ஹாசன். அதில் “தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தை குறித்து அன்பின் மிகுதியால் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. இது எனக்கு வலியை ஏற்படுத்துகிறது. நம் அனைவரும் ஒன்று, நாம் அனைவரும் ஒரே குடும்பத்தில் இருந்து வந்தவர்கள் என்பதைத்தான் எனது பேச்சுக்கள் குறிப்பிட்டனவே தவிர அதில் கன்னட மொழியை குறைத்து பேசியதற்கான எந்த முகாந்திரமும் இல்லை.
தமிழை போலவே கன்னட மொழியும் பெருமைக்குரிய கலாச்சார பண்பாடு கொண்டவை. கன்னடர்கள் என் மீது காட்டிய அன்பை நான் நேசித்து வருகிறேன். கன்னடர்கள் தங்களது கன்னட மொழி மீது வைத்திருக்கும் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்” என குறிப்பிட்டிருந்தார்.
ஆனால் அக்கடிதத்தில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இல்லை. இந்த நிலையில் கர்நாடகா நீதிமன்றம், “மன்னிப்பு கேட்கச் சொன்னால் ஏன் சுற்றி வளைத்து பேசுகிறீர்கள்? கமல் கன்னட மொழியை மதிக்கிறார் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் அதில் மன்னிப்பு என்ற ஒரு வார்த்தை கூட இல்லையே” என கேள்வி எழுப்பியது. மேலும் “மன்னிப்பு கேட்பதில் கமல்ஹாசனுக்கு என்ன ஈகோ?” என்றும் கேள்வி எழுப்பியது.
இதற்கு கமல்ஹாசன், “தவறு செய்தால்தானே மன்னிப்பு கேட்க வேண்டும். தவறாக புரிந்துகொண்டதற்கு எப்படி மன்னிப்பு கேட்க?” என்று கூறினார். இவ்வாறு கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க தயாராக இல்லாத நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் வெளியீடு கர்நாடகா மாநிலத்தில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அனுமதி கொடுத்தாலும் பயன் இல்லை
ஒரு வேளை “தக் லைஃப்” திரைப்படத்திற்கு கர்நாடகா உயர்நீதிமன்றம் அனுமதி கொடுத்தாலும் அத்திரைப்படம் கர்நாடகாவில் வெளியாக வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது. அதாவது உயர்நீதிமன்றம் அனுமதி அளித்தாலும் கர்நாடகாவின் பிலிம் சேம்பரும் அம்மாநில திரையரங்கு உரிமையாளர்களும் இத்திரைப்படத்தை வெளியிட அனுமதி தரமாட்டார்கள் என கூறப்படுகிறது. ஆதலால் தடை நீங்கினாலும் பயன் இல்லை என கோலிவுட் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.