எந்த வித சலசலப்பும் இல்லாமல் நடைபெற்ற தவெகவின் இரண்டாம் கட்ட கல்வி விருது விழா! என்னப்பா இது?
Author: Prasad4 June 2025, 11:23 am
கல்வி ஊக்கத்தொகை வழங்கும் விஜய்
கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்விச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கி வருகிறார் தவெக தலைவர் விஜய். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது.
இதில் முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழா, கடந்த மே மாதம் 30 ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடலூர், ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, அரியலூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களின் 88 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட மாணவ மாணவியர்களுக்கு கல்விச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கினார் விஜய்.

இரண்டாம் கட்ட கல்வி விருது…
இந்த நிலையில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழா இன்று மாமல்லபுரம் ஷெரட்டான் ஹோட்டலில் நடைபெற்று வருகிறது. இதில் விஜய் இராமநாதபுரம், கரூர், ஈரோடு, தஞ்சாவூர், விருதுநகர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பத்தூர், திருப்பூர், திருவாரூர், மயிலாடுதுறை, புதுச்சேரி ஆகிய பகுதிகளின் 84 சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மாணவ மாணவிகளுக்கு கல்விச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்குகிறார்.
முதல் கட்ட கல்வி விருது விழாவில் “நீட் தான் முக்கியமா?” என விஜய் பேசியது பல விமர்சனங்களை எழுப்பிய நிலையில் இரண்டாம் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் அவர் மாணவர்களுக்கு எந்த அறிவுரையும் கூறாமல் நேராகவே கல்விச் சாறிதழ் வழங்கத் தொடங்கினார். இது குறித்து முதல் கட்ட கல்வி விழாவில் விஜய் பேசியபோது, “எப்போதுமே அறிவுரை கூறிக்கொண்டே இருந்தால் உங்களுக்கே கோபம் வந்துவிடும். ஆதலால் இந்த விழாவில் மட்டும் நான் பேசிக்கொள்கிறேன்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.