போக்சோவில் கைதான நபருடன் பணியாற்றிய விக்னேஷ் சிவன்? நயன்தாராவை கட்டம் கட்டிய நெட்டிசன்கள்!
Author: Prasad3 July 2025, 11:53 am
போக்சோவில் கைதான ஜானி மாஸ்டர்
தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் ஜானி மாஸ்டர். இவர் தமிழில் “அரபிக்குத்து”, “ரஞ்சிதமே”, “காவாலா” போன்ற பல ஹிட் பாடல்களில் நடன இயக்குனராக பணிபுரிந்திருக்கிறார். இதனிடையே கடந்த 2024 ஆம் ஆண்டு ஜானி மாஸ்டருடன் பணிபுரிந்து வந்த 21 வயது பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் தன்னை பல வருடங்களாக பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்து வந்ததாக போலீஸாரிடம் புகார் அளித்தார். அப்பெண் மைனராக இருந்த சமயத்தில் இருந்தே ஜானி மாஸ்டர் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்ததாகவும் கூறப்பட்ட நிலையில் அவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். எனினும் நிபந்தனை ஜாமீனில் ஜானி மாஸ்டர் வெளிவந்தார்.

ஜானி மாஸ்டருடன் விக்னேஷ் சிவன்
விக்னேஷ் சிவன் தற்போது “LIK” என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதனை நயன்தாராவும் லலித்குமாரும் இணைந்து தயாரிக்கின்றனர். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு ஜானி மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக தெரிய வருகிறது. இந்த நிலையில் ஜானி மாஸ்டர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், விக்னேஷ் சிவனுடன் பணிபுரிவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக விக்னேஷ் சிவனுடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் ஒரு வீடியோவையும் பகிர்ந்திருந்தார். இந்த பதிவை விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டா பக்கத்தின் ஸ்டோரியில் பகிர்ந்து “Sweet Master ji” என குறிப்பிட்டிருந்தார்.
கட்டம் கட்டிய நெட்டிசன்கள்
விக்னேஷ் சிவனின் இந்த பதிவை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் “பல தடைகளை தாண்டி சுயமாக வளர்ந்த பெண் என்று தன்னை தானே சொல்லிக்கொள்ளும் நயன்தாரா, இவ்வாறு போக்சோவில் கைதான நபருடன் அவரும் அவரது கணவரும் பணியாற்றுவது நியாயமா?” என கேள்வி எழுப்பி வருகின்றனர். “ஒரு தயாரிப்பாளராக நயன்தாராவும் இதற்கு பொறுப்புதான்” எனவும் “நயன்தாரா தனது மதிப்பை இழந்துவிட்டார்” எனவும் விமர்சனங்களை அள்ளித்தெளித்து வருகின்றனர். ஜானி மாஸ்டருடன் விக்னேஷ் சிவன் இடம்பெற்ற புகைப்படம் வெளியானதை தொடர்ந்து சமூக வலைத்தளம் முழுக்க இது குறித்த பேச்சுக்களே வலம் வருகின்றன.