“ரொம்ப பசிக்குது சார்” ; ஓடும் ரயிலை திடீரென நிறுத்திய விஜயகாந்த்? ஒரு தரமான சம்பவம்…
Author: Prasad25 August 2025, 4:37 pm
நினைவுகளில் வாழும் கேப்டன்…
சக நடிகர்களாலும் ரசிகர்களாலும் கேப்டன் என்று செல்லமாக அழைக்கப்பட்டவர்தான் விஜயகாந்த். இவர் நம்மை விட்டு நீங்கினாலும் நமது நினைவுகளில் என்றும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். பசி என்று வருபவர்களின் பசியை ஆற்றி அவர்களது வயிறையும் மனதையும் நிரப்பி அனுப்புபவர்தான் விஜயகாந்த். அவர் செய்யாத உதவிகளே கிடையாது.
ஏழை மக்களுக்கும் சரி, சக நடிகர்களுக்கும் சரி பிரச்சனை என்று வந்துவிட்டால் உதவி செய்ய களமிறங்கிவிடுவார். ஆதலால்தான் அவர் பல கோடி பேரின் மனதில் தற்போதும் வாழ்ந்துகொண்டு இருக்கிறார். இன்று கேப்டன் விஜயகாந்தின் 73 ஆவது பிறந்தநாள் ஆகும். தமிழகத்தில் வாழும் பல கோடி பேர் அவரது நினைவுகளை இன்று பகிர்ந்துகொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சக நடிகர்களின் பசியை போக்க விஜயகாந்த் ஓடும் ரயிலையே நிறுத்திய சம்பவம் ஒன்றை குறித்து இப்போது பார்க்கலாம்.

பசியில் வாடிய நடிகர்கள்!
விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த சமயத்தில் நடிகர்கள் பலரையும் வைத்து மதுரையில் ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தினார். அந்நிகழ்ச்சியை முடித்துவிட்டு அனைத்து நடிகர்களுடன் விஜயகாந்தும் சென்னைக்கு ரயிலேறினார். அப்போது சக நடிகர்கள் யாரும் சாப்பிடவில்லை என தெரிய வந்திருக்கிறது.
அது ராத்திரி நேரம். போகும் வழியில் ஒரு இடத்தில் விஜயகாந்த் டிடிஆரிடம் ரயிலை நிறுத்தச்சொல்லியிருக்கிறார். ஆனால் டிடிஆரோ மறுத்துவிட விஜயகாந்தே செயினை பிடித்து இழுத்து நிறுத்தினாராம். லுங்கு, டி சர்ட்டுடன் ரயிலில் இருந்து இறங்கிய விஜயகாந்த் ஒரு ஒத்தையடிப்பாதை வழியாக நடந்து சென்றிருக்கிறார். அங்கே தூரத்தில் ஒரு ஹோட்டலை பார்த்திருக்கிறார்.
அப்போது இரவு 11 மணி. அந்த ஹோட்டலை மூடும் நேரம். அந்த சமயத்தில் ஹோட்டலுக்குள் நுழைந்த விஜயகாந்த் “சாப்பிட என்ன இருக்கிறது?” என கேட்க ஹோட்டல் கடை முதலாளி புரோட்டா மட்டும் இருப்பதாக கூறியிருக்கிறார். அனைத்து புரோட்டாக்களையும் பார்சல் கட்ட சொல்லியிருக்கிறார்.

“என்னிடம் இப்போது காசு இல்லை. நாளை எனது ரசிகர் மன்றத்தை சேர்ந்த ஒருவன் உங்களுக்கு பணம் கொடுப்பார்” என கூறினாராம். ஏற்கனவே விஜயகாந்தை பார்த்த ஆச்சரியத்தில் திளைத்து நின்றுகொண்டிருந்த ஹோட்டல் முதலாளி, “பணம் இல்லை என்றாலும் பரவாயில்லை” என கூறியிருக்கிறார்.
அதன் பின் விஜயகாந்த் புரோட்டா பொட்டலங்களுடன் ரயிலுக்கு திரும்ப, அங்கே ரயிலை எடுக்கவிடாமல் நடிகர்கள் தாமுவும் சந்திரசேகரும் தண்டவாளத்தில் படுத்துக்கிடந்தார்களாம். அதன் பின் அவர்களை எழுப்பி அவர்களை ரயிலில் ஏறச்சொல்லி தானும் ரயிலில் ஏறிக்கொண்டாராம். அதன் பிறகு ரயில் கிளம்ப சக நடிகர்களுக்கும் புரோட்டாக்களை பகிர்ந்தளித்து அவர்களின் பசியை போக்கியுள்ளார். இச்சம்பவத்தை சூர்யா உள்ளிட்ட நடிகர்கள் தங்களது பேட்டிகளில் பகிர்ந்துள்ளனர்.
