படம் வெளியாகி அரை மணி நேரத்துல ட்ரோல்; எல்லாமே அரசியல்- தக் லைஃப்க்கு முட்டுக்கொடுக்கும் பிரபலம்?
Author: Prasad13 June 2025, 5:55 pm
எங்கு திரும்பினாலும் டிரோல்
மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன் உள்ளிட்ட பலரது நடிப்பில் வெளியான “தக் லைஃப்” திரைப்படத்தை சமூக வலைத்தளங்களில் எங்கு திரும்பினாலும் ட்ரோல் செய்து வருகின்றன. குறிப்பாக திரிஷா மீது கமல்ஹாசன், சிம்பு ஆகிய இருவரும் மோகம் கொள்வது போல் கதையில் இடம்பெற்றதை வைத்து பல மீம்ஸ்கள் உலா வருகின்றன.

மேலும் மணிரத்னம் “விவேகம்”, “செக்கச் சிவந்த வானம்”, பின்பு கொஞ்சம் நீலப்படங்களை தூவி “தக் லைஃப்” படத்தை உருவாக்கியுள்ளதாகவும் கூட பல மீம்கள் பரவி வருகிறது. இவ்வாறு “தக் லைஃப்” குறித்து மிக மோசமான மீம்களும் டிரோல்களும் உருவாகி வரும் நிலையில் பிரபல எழுத்தாளரும் வசனக்கர்த்தாவுமான ஜெயமோகன் இத்திரைப்படத்தை ட்ரோல் செய்வதற்கான காரணங்களை குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.
எல்லாமே அரசியல்…
“தக் லைஃப் திரையரங்கில் வெளியாகி வெறும் இருபது நிமிடம் ஆவதற்கு முன்னமே மிகக்கடுமையான பலநூறு எதிர்விமர்சனங்கள், டிரோல்கள் வெளியாகிவிட்டன. முதல்காட்சி முடிவதற்குள்ளேயே படம் பற்றிய எதிர்மறை கருத்து உருவாக்கப்பட்டுவிட்டது. காரணம் கமல்ஹாசனின் அரசியல்தான், சூர்யாவுக்கும் இதே பிரச்சனைதான்” என கூறியுள்ளார்.

மேலும் கூறிய அவர், “ஒரு தரப்பு படத்தை வீழ்த்த முயன்றால் இன்னொரு தரப்பு படத்தை தூக்க முயலலாமே என்று நீங்கள் கேட்கலாம். அது சாத்தியமே இல்லை. எவரானாலும் ஒரு நுகர்வுப் பொருளை பற்றி எதிர்மறை சித்திரத்தை மட்டுமே உருவாக்க முடியும். நேர்நிலை சித்திரத்தை உருவாக்க முடியாது. ஒரு தாக்குதலுக்கு எதிர்தாக்குதல் மட்டுமல்ல, தடுப்புநிலை கூட எடுக்க முடியாது. கமல்ஹாசனுக்கும் ரசிகர்படை உண்டு, அரசியல்தரப்பும் உண்டு. ஆனால் அவர்கள் செயலற்றவர்கள்” என்றும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்திற்கு ரசிகர்கள் பலரும் “படத்திற்கு தேவையில்லாமல் முட்டுக்கொடுக்கிறார்” என இவரை விமர்சித்து வருகின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகன், மணிரத்னத்தின் “பொன்னியின் செல்வன்” திரைப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார். மேலும் “வெந்து தணிந்தது காடு”, “இந்தியன் 2” ஆகிய திரைப்படங்களிலும் வசனக்கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
