கார்களில் இனி ஏர்பேக்குகள் கட்டாயம்… மத்திய அரசின் புதிய உத்தரவு அமலாகும் தேதி அறிவிப்பு : கார்களின் விலை உயரவும் வாய்ப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
29 October 2022, 12:58 pm

8 பேர் பயணிக்க இருக்கைகள் கொண்ட கார்களில் இனி 6 ஏர்பேக்குகள் கட்டாயம் பொருத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் இனி கட்டாயம் டூயல் ஏர்பேக் கட்டாயம் பொருத்த வேண்டும் என மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை உத்தரவிட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது.

முன்னதாக கடந்த ஜூலை 2019 முதல், அனைத்து புதிய கார்களிலும் டிரைவர் பகுதியில் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது. அதே நேரத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதல், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் ஏர்பேக் கட்டாயமாக்கப்பட்டது.

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் படி ஏப்ரல் 1, 2021 முதல் அறிமுகம் செய்யப்படும் புதிய மாடல் கார்கள் அனைத்திலும் டூயல் ஏர்பேக் அதாவது காரை இயக்குபவருக்கும், முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் மற்றொரு நபருக்கும் கட்டாயம் ஏர்பேக் பாதுகாப்பை அளிக்க வேண்டும் என அறிவித்திருந்தது.

இதனை தொடர்ந்து, எட்டு பேர் அமர்ந்து பயணிக்கக்கூடிய பெரிய ரக கார்களில், 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்க அரசு திட்டமிட்டிருந்தது. 8 பேர் வரை செல்லும் மோட்டார் வாகனங்களில் பயணம் செய்வோரின் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில், குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்குவதற்கான வரைவு பொது சட்ட விதிகள் அறிவிப்பிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்காரி இன்று கூறியிருப்பதாவது, “மோட்டார் வாகனங்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பு முதன்மையான முன்னுரிமையாகும். இதனை கருத்தில் கொண்டு, 2023ஆம் ஆண்டு அக்டோபர் முதல், ‘எம்-1 ரக பயணிகள் கார்களில் குறைந்தது ஆறு ஏர்பேக்குகள் பொருத்தப்பட்டிருப்பது கட்டாயம்’ என்று எடுக்கப்பட்ட முன்மொழிவை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த கட்டாய விதி உறுதியாக நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில் இந்தியாவில் சிறிய என்ட்ரி லெவல் சிறிய காரின் விலையில் 10% வரை உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?