தெலுங்கானாவில் களைகட்டிய ‘சம்மக்க சரக்க’ திருவிழா : ஒன்றரை கோடி பேர் பங்கேற்கும் மெகா திருவிழா தொடங்கியது!!

Author: Udayachandran RadhaKrishnan
16 February 2022, 5:48 pm
Sammakka Sarakka 1 - Updatenews360
Quick Share

தெலங்கானா : இரண்டு வருடம் ஒருமுறை நடக்கும் சம்மக்க சரக்க திருவிழா தொடங்கிய நிலையில் 1.5 கோடி மக்கள் பங்கேற்கும் மெகா திருவிழா ஒரு வாரம் நடைபெறுகிறது.

தெலங்கானா மாநிலம் முலுகு மாவட்டத்தில் உள்ள மேதாராம் பகுதியில் நடைபெறும் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த ‘சம்மக்கா சரக்கா ஜாத்ரா’ விழாவில் பங்கேற்க ஏராளமான பக்தர்கள் வருகை வந்த வண்ணம் உள்ளனர்.

பழங்காலத்தில், போக்குவரத்து வசதி இல்லாத போது, அண்மையில் இருப்பவர்களும், தொலைதூரத்தில் இருப்பவர்களும், அடர்ந்த வனப்பகுதிகள் வழியாக, நடந்தே வந்து இந்த விழாவில் பங்கேற்பார்கள். ஏராளமானோர் மாட்டு வண்டிகளிலும் வருவார்கள்.

ஒரு வார காலம் நடைபெறும் இந்த ஜாத்ரா விழாவுக்கு வரும் பக்தர்கள், அடர்ந்த வனப்பகுதிக்குள் தற்காலிக கூடாரங்களை அமைத்துக் கொண்டு தங்கியிருப்பார்கள். தெலங்கானாவில் நடைபெறும் இவ்விழாவிற்கு, சத்தீஸ்கர், மகாராஷ்டிரம், கம்மம், பத்ராசலம் மற்றும் பல்வேறு பழங்குடியினப் பகுதிகளிலிருந்தும் ஏராளமான மக்கள் கோதாவரியின் இரு கரைகளையும் தொட்டவாறு வந்தவண்ணம் இருப்பார்கள்.

ஆண்டுகள் உருண்டோடி நிலையில் மாட்டுவண்டிகளில் வந்தவர்கள் பலரும் தற்போது ஹெலிகாப்டரில் வந்திறங்கும் காலமாகிவிட்டது. மேதாரத்துக்கு 2010ஆம் ஆண்டு முதல் வாராங்கலில் உள்ள மம்நூர் விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் சேவை தொடங்கியது.


ஆனால், அதற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. தற்போது பல புதிய வசதிகளுடன் இந்த சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. சுமார் 1.5 கோடி மக்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படும் ஜாத்ரா, இன்று தொடங்கியிருக்கிறது.

தெலங்கானாவில் இயக்கப்படும் 4 ஆயிரம் பேருந்துகள் மூலம் சுமார் 30 லட்சம் பேர் வருவார்கள் என்றும், 3.5 லட்சம் பேர் தனியார் வாகனங்கள் மூலம் வருவார்கள் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.


அப்பகுதியில் தேவையான ஏற்பாடுகள் செய்யும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி தெலங்கானாவின் கும்பமேளா என்றழைக்கப்படுகிறது.

Views: - 677

0

0