மகளிர் ஆணைய தலைவருக்கு பாலியல் தொல்லை.. 15 கி.மீ. காரில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் : தலைநகரை உலுக்கிய நிகழ்வு!!

Author: Babu Lakshmanan
19 January 2023, 5:44 pm

மகளிர் ஆணைய தலைவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் தலைநகர் டெல்லியை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

டெல்லி மகளிர் ஆணைய தலைவர் ஸ்வாதி மாலிவால், எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது நுழைவு வாயிலுக்கு எதிரே இன்று அதிகாலை 3.11 மணியளவில் நின்று கொண்டிருந்தார். அப்போது, கார் ஓட்டுனர் ஒருவர், அவரை 10 முதல் 15 மீட்டர் தொலைவுக்கு காரில் இழுத்து சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்து உள்ளது.

இது குறித்து ஸ்வாதி மாலிவால் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,”நேற்றிரவு டெல்லியில் பெண்களின் பாதுகாப்பு சூழல் பற்றி ஆய்வு செய்வதற்காக சென்றேன். அப்போது, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் எனக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அவரை பிடிக்க முயன்ற போது, காரின் ஜன்னலில் எனது கையை சிக்க வைத்து விட்டு, காருடன் என்னை இழுத்து சென்றார். டெல்லியில் மகளிர் ஆணைய தலைவரே பாதுகாப்புடன் இல்லை எனும்போது, நிலைமையை கற்பனை செய்து பாருங்கள்,” என குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி பேசிய டெல்லி போலீஸ் அதிகாரி, குடிபோதையில் இருந்த கார் ஓட்டுனர் ஹரீஷ் சந்திரா (47) என்பவர் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும், ஸ்வாதி மாலிவால் தனது குழுவினருடன் சாலையோரம் நின்று கொண்டிருக்கும்போது, இந்த சம்பவம் நடந்துள்ளது என அவர் கூறியுள்ளதாக தெரிவித்தார்.

அண்மையில் டெல்லியில் ஸ்கூட்டியில் தோழியுடன் சென்ற அஞ்சலி சிங் என்ற இளம்பெண், புது வருட தினத்தன்று காரில் 12 கி.மீ. தொலைவுக்கு இழுத்து செல்லப்பட்டு உயிரிழந்தது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி இருந்தது. இந்த சூழலில், மகளிர் ஆணைய தலைவருக்கும் அதேபோன்ற ஒரு நிகழ்வு ஏற்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • why police did not arrested virat kohli for 11 death in rcb celebration அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்