ஐபிஎல் ஏலத்தில் கோடிகளை அள்ளிய இங்கிலாந்து வீரர்கள்… ஒரு வீரருக்கு மட்டும் அத்தனை கோடியை கொடுத்த சென்னை அணி… குஷியில் ரசிகர்கள்..!!

Author: Babu Lakshmanan
23 December 2022, 4:07 pm
Quick Share

16வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல் – மே மாதங்களில் நடக்கிறது. இதையொட்டி, மினி ஏலம் நடக்க இருப்பதால், 10 அணிகள் மொத்தம் 163 வீரர்களை தக்க வைத்துக் கொண்டன. 85 வீரர்கள் விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விடுவிக்கப்பட்ட வீரர்களின் இடத்தை நிரப்பும் விதமாக ஐ.பி.எல். வீரர்களுக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்று நடக்கிறது. ஏலப்பட்டியலில் 273 இந்தியர், 132 வெளிநாட்டவர் என்று மொத்தம் 405 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் இருந்து அதிகபட்சமாக 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 87 வீரர்கள் ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வில்லியம்சன் 2 கோடிக்கு குஜராத் அணியாலும், இங்கிலாந்து அதிரடி வீரர் ஹாரி ப்ரூக் ரூ.13.25 கோடிக்கும், மயாங்க் அகர்வால் ரூ.8.25 கோடிக்கும் ஐதராபாத் அணியால் ஏலம் எடுக்கப்பட்டனர். ரகானேவை ரூ.50 லட்சமான ஆரம்பவிலைக்கே சென்னை அணி எடுத்தது.

இதைத் தொடர்ந்து, இங்கிலாந்து ஆல் ரவுண்டரான சாம் கரனை எடுக்க மும்பை, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், ரூ.18.50 கோடிக்கு பஞ்சாப் அணி எடுத்தது. இதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் ஒரு வீரர் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போனவர் என்ற பெருமையை அவர் படைத்துள்ளார். கடந்த 2021ல் தென்னாப்ரிக்கா வீரர் ரூ.16.25 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டர் கேம்ரூன் கிருனை ரூ.17.50 கோடிக்கு மும்பை அணி ஏலத்தில் எடுத்தது. வங்கதேச அணியின் ஆல் ரவுண்டர் ஷகிப் உல் ஹசனை எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

வெஸ்ட் இண்டீஸின் ஓடியன் ஸ்மித்தை ரூ.50 லட்சத்துக்கு குஜராத் அணியும், ஜெசன் ஹோல்டரை ரூ.5.75 கோடிக்கு ராஜஸ்தான் அணியும், ஜிம்பாப்வே அணியின் ஆல் ரவுண்டர் சிக்கந்தர் ராஷாவை அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துக்கு பஞ்சாப் அணியும் ஏலத்தில் எடுத்தது. மேலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸை ரூ.16.25 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் எடுத்தது.

Views: - 310

0

0