சொல்லி அடித்த சென்னை அணி.. தோனிக்கு காத்திருந்த டபுள் ட்ரீட் : மோசமான சாதனையில் ரோகித் ஷர்மா..

Author: Udayachandran RadhaKrishnan
6 May 2023, 7:48 pm
CSK - Updatenews360
Quick Share

16வது ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் ஆட்டத்தில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் இன்று 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகிறது.

அதில் சென்னையில் நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் எம்.எஸ் தோனி முதலில் பந்துவீச முடிவெடுத்தார். அதன்படி முதலில் மும்பை அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேமரூன் கிரீனும் , இஷான் கிஷனும் களமிறங்கினர்.

கிரீன் 6 ரன்னிலும், இஷான் கிஷன் 7 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட்டாகினர்.
அடுத்து வந்த கேப்டன் ரோகித் சர்மா டக் அவுட் ஆகி அதிர்ச்சியளித்தார். அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிகமுறை டக் அவுட் ஆன வீரர் என்ற மோசமான சாதனைக்கு சொந்தக்காரரானார்.

இதனால், மும்பை அணி தொடக்கத்திலேயே 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாடியது. இதனை தொடர்ந்து நிஹால் வதேராவும், சூரியகுமார் யாதவும் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

சூர்யகுமார் யாதவு 20 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடிய வதேரா, அரைசதம்கடந்தார். அவர் 51 பந்துகளில் 64 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதிரடியில் மிரட்டி வந்த டிம் டேவிட் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். சென்னை பந்துவீச்சாளர்களின் சிறப்பான பந்துவீச்சால், மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்களை குவிக்க திணறினர்.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் தீக்ஷனா சிறப்பாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். தீபக் சாகர், துஷார் தேஷ்பாண்டே தலா 2 விக்கெட்டுகளை எடுத்தனர்.

இதனை தொடர்ந்து 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுடான் கெய்க்வாட்டும், டிவோன் கான்வேயும் களமிறங்கினர். இருவரும் அணிக்கு சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.

கெய்க்வாட், தன் பங்குக்கு 16 பந்துகளில் 30 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். ரஹானே 21 ரன்களும், ராயுடு 12 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கான்வே 44 ரன்கள் எடுத்தார். மும்பை அணியின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட சென்னை பேட்ஸ்மேன்கள், அவ்வபோது பவுண்டரிகளை விளாசி ரன்ரேட்டை உயர்த்தினர்.

சென்னை அணியின் ரன்வேகத்தை கட்டுப்படுத்த மும்பை பந்துவீச்சாளர்களால் முடியவில்லை. இறுதியில் சென்னை அணி 17.4 ஓவர்களில் இலக்கை கடந்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபாரவெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்திற்கு முன்னேறியது.

இந்த போட்டியை சென்னை அணியின் முன்னாள் வீரர் ரெய்னா நேரில் வந்து கண்டுகளித்தார். அப்போது தோனியுடன் கைக்கோர்த்து போட்டோ எடுத்துக்கொண்டார். இதனால் தோனி நெகிழ்ந்து போனார்.

ரெய்னா தனது 3ஆம் நம்பர் சிஎஸ்கே ஜெர்சியை அணிந்து தோனியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

Views: - 315

0

0