இந்தியா – அயர்லாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி இன்று தொடக்கம் : இந்திய அணியில் அதிரடி மாற்றம்….!!

Author: Udayachandran RadhaKrishnan
26 June 2022, 7:02 pm
Ind vs Ire - Updatenews360
Quick Share

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பர்மிங்காமில் ஜூலை 1-ந் தேதி தொடங்குகிறது.

இந்த போட்டியில் பங்கேற்க இங்கிலாந்துக்கு சென்றுள்ள ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி தற்போது அங்கு பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.

இதற்கிடையே, ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய இரண்டாம் தர அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக இரண்டு 20 ஓவர் போட்டியில் ஆடுகிறது.

இந்த தொடரில் ரோகித் சர்மா, விராட்கோலி, ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம் பெறவில்லை. ரோகித் சர்மாவுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.

இந்தியா-அயர்லாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி டப்ளினில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிக்கான அணியினருடன் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் சென்று இருப்பதால் அயர்லாந்துக்கு எதிரான தொடருக்கு தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவர் வி.வி.எஸ்.லட்சுமண் பயிற்சியாளராக செயல்படுகிறார்.

சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்த ஹர்திக் பாண்ட்யா முதல்முறையாக இந்திய அணியை வழிநடத்துகிறார். கேப்டனாக அவரது செயல்பாடு எப்படி? இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்திய அணியில் ராகுல் திரிபாதி, உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர். இருப்பினும் அவர்களுக்கு களம் காணும் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான்.

பேட்டிங்கில் இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வாட், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தினேஷ் காத்திக்கும், பந்து வீச்சில் புவனேஷ்வர்குமார், ஹர்ஷல் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அக்‌ஷர் பட்டேலும் வலுசேர்க்கிறார்கள்.

Views: - 1896

0

0