அன்று தாரே… இன்று சஜனா… மும்பை அணிக்கு கிடைத்த பொக்கிஷம்.. கடைசி பந்தில் சிக்சர் அடித்து த்ரில் வெற்றி..!!

Author: Babu Lakshmanan
24 February 2024, 10:02 am

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரைப் போலவே மகளிருக்கான WPL எனப்படும் மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. 2வது WPL கிரிக்கெட் தொடர் நேற்று கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் மோதின.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்சி அபாரமாக ஆடினார். இதனால், அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் சேர்த்தது.

இந்த நிலையில், 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி சிறப்பாக ஆடியது. கடைசி ஓவரில் அந்த அணியின் வெற்றிக்கு 2 பந்துகளில் 5 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், 55 ரன்கள் குவித்து களத்தில் இருந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் அவுட்டானார். எனவே, ஒரு பந்துக்கு 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கேப்சி வீசிய பந்தை மும்பை அணியின் சஜனா சிக்சர் அடித்து த்ரில் வெற்றி பெறச் செய்தார்.

கடந்த 2014ம் ஆண்டு மும்பை அணி பிளே ஆப்பிற்கு செல்ல வேண்டும் என்றால், ராஜஸ்தான் ராயல் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குறிப்பிட்ட ஓவரில் இலக்கை அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. அப்போது, ஒரு பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மும்பை அணியின் வீரர் ஆதித்ய தாரே சிக்சர் அடித்து வெற்றி பெறச் செய்தார்.

அதைப் போலவே, சஜனா மும்பை அணிக்கு தற்போது வெற்றி பெறச் செய்துள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!