ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் சேர நடிகர் சூர்யா, நடிகை கஜோல் ஆகியோருக்கு  அதிகாரப்பூர்வ அழைப்பு.!

Author: Rajesh
29 June 2022, 11:01 am

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் ஆகிய திரைப்படங்கள் ஆஸ்கார் விருது போட்டியில் பங்கெடுத்தன. இதைத்தொடர்ந்து அந்தப் படங்களின் நாயகனான சூர்யா ஆஸ்கர் விருதுக்கு திரைப்படங்களை தேர்வு செய்யும் குழுவின் உறுப்பினராக தேர்வாகியுள்ளார். அதேபோல் இந்தியாவிலிருந்து நடிகை கஜோலும் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளார்.

திரையுலகினர் பெரிதாகக் கருதும் ஆஸ்கர் விருது ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது. அது ஆங்கில படங்களுக்கான விருதாக இருந்தாலும், உலக சினிமா துறையினர் ஆஸ்கார் மீது பெரும் மரியாதை வைத்துள்ளனர்.

அத்துடன் ஆஸ்காரில் வழங்கப்படும் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்திற்கான பிரிவில் விருது வேண்டும் என்றும் கருதுகின்றனர். அப்படிப்பட்ட ஆஸ்கர் விருது உறுப்பினர் குழுவில் புதிதாக 397 உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

நடிகர்கள், இயக்குனர் ஆடை வடிவமைப்பாளர் என பல்வேறு துறைகளில் இருந்து தேர்வு நடைபெற்றுள்ளது. அதில் இந்தியாவில் இருந்து நடிகர் சூர்யா மற்றும் நடிகை கஜோல் ஆகியோர் ஆஸ்கர் குழுவில் உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்தமாக ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 4,000 அதிகமான உறுப்பினர்கள் உள்ளனர். தமிழ் திரையில் இருந்து ஏற்கனவே ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் தேர்வு குழு உறுப்பினராக உள்ளார். இதையடுத்து நடிகர் சூர்யா ஆஸ்கர் உறுப்பினர் குழுவில் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

புதிய உறுப்பினர்கள் ஆஸ்கர் பட்டியலுக்கான திரைப்படங்களை தேர்வு செய்ய வாக்களிக்கும் உரிமை பெறுவார்கள். ஆஸ்கர் அமைப்பின் அழைப்பை சூர்யா ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் ஐந்து ஆண்டுகள் அவர் அந்த குழுவில் இடம் பெற்றால், ஏ.ஆர். ரகுமான் போல், நடிகர் சூர்யாவும் ஆஸ்கர் விருது தேர்வுக் குழுவில் இடம் பெற வாய்ப்புள்ளது என சினிமா துறையினர் கூறுகின்றனர்.

  • vijay is bjp c team explained by vanathi srinivasan விஜய் பாஜகவோட C team? தவெக குறித்து ஓபனாக போட்டுடைத்த பிரபலம்!