மாற்றுக்கட்சி கவுன்சிலர்களை பணி செய்ய விடாத திமுக பிரமுகர் ; கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் கவுன்சிலர் குற்றச்சாட்டு!!

Author: Babu Lakshmanan
23 November 2022, 2:27 pm
Quick Share

வேலூர் மாவட்டம் வார்டு பணிக்காக நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்த நகராட்சி துணை தலைவர் எதிர்ப்பு தெரிவிப்பதாக குற்றம்சாட்டி கூட்டணி கட்சியைச் சேர்ந்த பெண் வார்டு உறுப்பினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு நகராட்சிக்குட்பட்ட 6வது வார்டு உறுப்பினராக (கவுன்சிலர்) இருப்பவர் தன்வீரா பேகம். இவர் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர். இவரது வார்டுக்குள் செல்லும் கொட்டாற்றில் குப்பை கழிவுகள் அதிகம் இருப்பதால் மழை காலங்களில் வெள்ள நீர் குடியிருப்புக்குள் புகுந்து விடுவதாகவும், இதற்கு முன் கழிவுநீருடன் சேர்ந்து தண்ணீர் குடியிருப்புக்குள் புகுந்ததன் காரணமாக கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் வீடு இடிந்து விழுந்து சிறுவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 6வது வார்டுக்குள் பாயும் கொட்டாற்றை தூர்வாரக்கோரி, வார்டு உறுப்பினர் தன்வீரா பேகம் பேர்ணாம்பட் நகராட்சிக்கு தொடர்ந்து வலியுறுத்தி உள்ளார். இதுவரை நடவடிக்கை எடுக்காததால் இன்று தாமாக சென்று நகராட்சி ஜேசிபி இயந்திரத்தை அழைத்து வந்து தூர்வாரும் பணியை மேற்கொண்டிருந்தார்.

அப்போது, திமுகவை சேர்ந்த பேர்ணாம்பட்டு நகராட்சியின் துணை தலைவர் ஆலியார் ஜிபேர் அகமது என்பவர், ஜேசிபி இயந்திர ஓட்டுனருக்கு போன் செய்து பணி செய்யக்கூடாது என்றும், இயந்திரம் ஏதேனும் பழுதானால் உனது சம்பளத்தில் பிடித்து விடுவேன் என கூறி தடுத்ததாகவும் தன்வீரா பேகம் குற்றம்சாட்டினார்.

மேலும், மாற்று கட்சியினரின் வார்டு என்பதால் எங்கள் வார்டில் எந்த பணியும் செய்வது இல்லை என 6வது வார்டு பெண் உறுப்பினர் தன்வீரா பேகம் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

மேலும் அந்த வீடியோவில் ஜேசிபியில் அவரே அமர்ந்து தூர்வாரும் பணியையும் மேற்பார்வை செய்வது குறிப்பிடத்தக்கது.

பெண்களுக்கு அரசியலில் சமஉரிமை அளிக்க வேண்டும் என்று கூறும் திமுகவினரே, தன்வீரா பேகம் போன்ற துடிப்பான பெண்கள் சமூக நலனுக்காக பணியாற்றுவதை இடையூறு செய்வது நியாயமா..? என்றும், இதுபோன்ற நபர்கள் மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

Views: - 762

0

0