‘திருடற பொருளை விற்று கஞ்சா அடிப்பேன்’… செல்போனை பறித்து சிக்கிக் கொண்ட 14 வயது சிறுவன் அதிர்ச்சி வாக்குமூலம்..!!

Author: Babu Lakshmanan
16 June 2022, 4:48 pm
Quick Share

கஞ்சா அடிப்பதற்காக செல்போன் திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஈடுபடுவதாக 14 வயது சிறுவன் தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக இரவு காத்திருந்தார். செல்போனில் பேசிக்கொண்டு இருந்த அவரிடம் இருந்து கண் இமைக்கும் நேரத்தில் 14 வயது சிறுவன் செல்போனை பறித்து கொண்டு ஓடினான். அச்சிறுவனை பின் தொடர்ந்து துரத்தி சென்றவாறு திருடன் திருடன் என கூச்சலிட்டுள்ளார்.

இவரது சத்தம் கேட்டு அங்கு இருந்தவர்கள் திருட்டு சிறுவனை மடக்கி பிடித்தனர். பின்பு பேருந்து நிலையத்தில் உள்ள தூணில் அவனை கட்டி வைத்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

அச்சிறுவனிடம் எதற்கு திருடின என கேட்டதற்கு அவன் அளித்த பதில் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. “பசங்களோட சேர்ந்து தண்ணி அடிச்சி சுத்திட்டு இருக்கேன். திருடின பொருளை விற்று கஞ்சா அடிப்பேன்,” என அந்த சிறுவன் கூறியதை அங்கிருப்பவர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தஞ்சையில் கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. வெளிப்படையாக கஞ்சா விற்பதை கண்டும் காவல்துறையினர் கண்டு கொள்வதில்லை என பேருந்து நிலையத்தில் கடை நடத்துபவர்கள் தெரிவிக்கின்றனர்.

சிறுவர்களை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி திருட்டு, வழிப்பறி சம்பவங்களில் ஒரு கும்பல் ஈடுபடுத்தி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Views: - 539

0

0