அஜித் கொலை வழக்கில் கைதான 5 தனிப்படை காவலர்களுக்கு இறுகும் பிடி… சிபிஐ மனுவுக்கு நீதிமன்றம் அனுமதி!!
Author: Udayachandran RadhaKrishnan30 July 2025, 2:22 pm
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மடப்புரம் அஜித்குமாரை அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கரமணிகண்டன் ஐந்து பேரையும் சிபிஐ அதிகாரிகள் விசாரணைக்கு எடுப்பதற்கான மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் மதுரை மத்திய சிறையில் இருந்து 5 தனிப்படை காவலர்கள் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்
ஜூன் 28ஆம் தேதி நகை காணாமல் போனது தொடர்பான வழக்கில் விசாரணை நடத்தும் போது தனிப்படை காவலர்களால் தாக்குதலுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் 16ஆவது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வழக்கின் முக்கிய சாட்சியாக உள்ள அஜித்குமார் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் உள்ள தனிப்படை காவலர்களான கண்ணன், பிரபு, ஆனந்த், ராஜா, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேரின் காவல் நீட்டிப்பு மனு மீதான விசாரணைக்காக மதுரை மாவட்ட தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி முன்பாக விசாரணைக்கு வரவுள்ள நிலையில் 5 பேரும் சிறையில் இருந்து அழைத்துவரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டனர்.

அவர்கள் ஐந்து பேருக்கும் ஆகஸ்ட் 13ஆம் தேதி வரை காவல் நீட்டிப்பு செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
