5 வயதில் ஐந்து உலக சாதனை… வியாதியின் பிடியில் மகன் மற்றும் தாய்… நிர்கதியாய் நிற்கும் குடும்பம்… உதவிக்கரம் நீட்டுமா தமிழக அரசு..!!

Author: Babu Lakshmanan
2 April 2022, 2:22 pm
Quick Share

மறைந்து வரும் தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றான சிலம்பம் விளையாட்டில் தற்பொழுது மாணவர்கள் சாதனை புரிந்து வருகின்றனர். அப்படிப்பட்ட சிலம்பம் விளையாட்டில் 5 உலக சாதனைகளை ஐந்து வயதில் நிகழ்த்திய சிறுவன் இருக்க இடம் இன்றியும், வியாதியின் பிடியில் தவித்து வரும் சிறுவனைப் பற்றிய ஒரு செய்தி தொகுப்புதான் இது.

திருப்பத்தூர் சகாயம் நகரைச் பூர்வீகமாக கொண்டவர் ஆஷா. இவர், தனது 5 வயது மகன் ஜெனோ பிராங்க்ளினுடன், தெரிந்த ஒருவரின் அடைக்கலத்தில் வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகர் பகுதியில் வசித்து வருகின்றனர். 5 வயது சிறுவன் அங்குள்ள தனியார் பள்ளியில் யூ.கே.ஜி படித்து வருகிறார்.

தமிழர்களின் தற்காப்பு கலையில் ஒன்றான சிலம்பக் கலையில் ஆர்வம் மிகுந்து காணப்பட்டு வந்த ஜெனோபிராங்க்ளின், தனது இரண்டரை வயதிலிருந்து இரு கலைக்கூடங்களில் கடும் பயிற்சி எடுத்து, தொடர் விடா முயற்சி செய்து, ஜெனோ பிராங்க்ளின் சிலம்பப் போட்டிகளில் தொடர்ந்து பல்வேறு சாதனைகளை புரிந்து அசத்தி வருகிறான்.

சிறுவனின் தொடர்ச்சியான விடா முயற்சி காரணமாக 12 பானைகள் மீது நின்றபடி தொடர்ந்து 20 நிமிடங்கள் சிலம்பம் சுற்றி சாதனைப் படைத்தார். இந்த சாதனை நோபல் வேர்ல்டு ரெக்கார்ட்ஸ்’ அமைப்பு, 5 வயதிற்கு உட்பட்ட சிறுவர் பிரிவினருக்கான உலக சாதனையாகப் பதிவு செய்து சிறுவனுக்கு சான்றிதழ், பதக்கம், கேடயம் வழங்கி அந்தக் குழுவினர் ஜெனோ பிராங்கிளினை மேலும் ஊக்கப்படுத்தினர்.

இதோடு விட்டுவிடாமல் சிறுவன் ஜெனோ பிராங்கிளின் அடுத்த முயற்சியாக 30 பானைகள் மீது ஏறி நின்று தொடர்ந்து 1 மணி நேரம் சிலம்பம் மற்றும் மான் கொம்பு சுற்றி, சாதனை படைத்தான். இந்த நிகழ்வும் இன்டர்நேஷனல் ஸ்டார் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் உலக சாதனையாகப் பதிவு செய்யப்பட்டது.

மேலும், ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிற்கு சாலையில் சிலம்பம் சுற்றிக்கொண்டு பின்நோக்கி நடந்தபடியே புதிய சாதனையை நிகழ்த்திய ஜெனோ பிராங்க்ளின், 30 பானைகள் மீது அமர்ந்து யோகாசனம், 30 நிமிடங்கள் சுருள் வாள் வீச்சிலும் சாதனை புரிந்தான். இந்த சாதனையும் ஜெட்லி புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்’ என்ற தனியார் அமைப்பும், சிறுவனுடைய சாதனைகளை மூன்று உலக சாதனைகளாக இடம் பெறச் செய்திருக்கிறது.

இந்த ஐந்து வயதிலேயே 5 உலக சாதனைகளை நிகழ்த்தியிருக்கும் சிறுவன் ஜெனோ பிராங்க்ளினைப் பொதுமக்கள் பாராட்டி வருகிறார்கள்.

ஆனால் ஜெனோ பிராங்கிளின் வாழ்க்கையின் மறுபக்கத்தை நாம் உற்றுநோக்கினால் அச்சிறு மழலை பிறந்து ஏழாவது நாளில் இருந்து சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு அவதி பட்டு வருகிறான். இருப்பினும், தான் ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்று இந்திய நாட்டிற்கு தங்க மெடல் வாங்குவேன் என்று அந்த மழலை கூறும் அழகிய சொல், நம்மை நெகிழ வைக்கின்றது.

மேலும் ஸ்டாலின் அங்கிள் எனக்கு இருப்பதற்கு ஒரு வீடு கொடுங்கள் என்று அந்த மழலை குழந்தை கூறிய வார்த்தைகள், கனத்த இதயம் கொண்ட வரையும் ஒரு நிமிடம் கண் கலங்க வைக்கும். இவரது தாய் ஆஷாவிற்கும் மூளைக்கட்டி வியாதி உள்ளது. கணவனால் கைவிடப்பட்டு உறவுகளால் ஒதுக்கப்பட்டு, வீடு வாசல் இன்றி தவித்து, தெரிந்தவர்கள் வீடுகளில் அடைக்கலம் இருந்து வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட தாய் மற்றும் சிறுவன் ஆகிய இருவருக்கும், காட்பாடி சட்டமன்ற உறுப்பினரும், நீர்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம் எடுத்துக் கூறி, மத்திய, மாநில அரசுகளின் மூலம் விளையாட்டு பிரிவில், தன் குழந்தைக்கு ஏதாவது உதவிக்கரம் நீட்டுவார்கள் என்ற ஏக்கத்தோடு தாயும், அந்த மலையும் அவரை சந்திக்கும் நாளை நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Views: - 1107

0

0