நகைக்கடையில் நகை வாங்குவது போல நடித்து 8 சவரன் தங்க நகை அபேஸ் : சிசிடிவி காட்சியில் சிக்கிய இளைஞர்கள்.. போலீசார் விசாரணை!!

Author: Udayachandran RadhaKrishnan
25 May 2022, 8:45 pm

திருப்பூர் : நகைக்கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நகைகள் திருட்டு போனதாக புகார் குறித்து திருமுருகன்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த சின்னத்தம்பி (வயது 52). இவர் திருப்பூர் – அம்மாபாளையத்தில் நகைகடை வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் அந்த நகை கடைக்கு தங்க நாணயங்கள் வாங்குவது போல் இரண்டு வாலிபர்கள் முக கவசம் அணிந்து கடைக்குள் புகுந்துள்ளனர். அப்போது கடையில் இருந்த சின்னத்தம்பி அந்த வாலிபர்களிடம் தங்க நாணயங்களை காட்டியுள்ளார்.

பின்னர் வேறு டிசைன் உள்ள தங்க நாணயங்களை காட்டுமாறு வாலிபர்கள் கூறியுள்ளனர். சின்னத்தம்பி தங்க நாணயங்களை எடுக்க திரும்பும்பொழுது, நகைகடையில் இருந்த தங்க நாணயம் பாக்கெட்டை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

இதுகுறித்து கடை உரிமையாளர் திருமுருகன்பூண்டி போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருமுருகன்பூண்டி போலீசார் கடையில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.

விசாரணையில் 8.5 பவுன் அளவிலான நகைகள் திருடு போனது தெரிந்தது. பட்டப் பகலில் நகைக் கடையில் நகை வாங்குவது போல் நடித்து 8.5 பவுன் தங்க நாணயங்களை திருடிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  • producers not accept to produce ajith kumar 64th movie அஜித்குமாரின் கண்டிஷனை கேட்டு தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? அப்படி என்னதான் சொல்றாரு!