மைனர் பெண்ணை கடத்தி தாலி கட்டிய 20 வயது இளைஞர்.. அணைக்கட்டு பகுதியில் அடுத்து நடந்த ஷாக்!
Author: Udayachandran RadhaKrishnan12 June 2025, 11:46 am
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். அவர் அணைக்கட்டில் இயங்கி வரும் அரசு பெண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதேபோல், அணைக்கட்டு காந்தி நகர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(20), இவருக்கும் மைனர் பெண்ணுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சங்கர் மைனர் பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மைனர் பெண்ணிற்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று மைனர் பெண்ணின் பெற்றோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, போலீசார் சங்கர் மற்றும் மைனர் பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் சங்கர் மைனர் பெண்ணுடன் அணைக்கட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டு வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

பின்னர் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் மீட்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.