துப்பாக்கி குண்டுகளுடன் வந்த ராஜஸ்தானை சேர்ந்த நபர் : கோவை விமான நிலையத்தில் பரபரப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
22 July 2023, 1:28 pm
Gun - Updatenews360
Quick Share

கோவையிலிருந்து மும்பைக்கு விமானத்தில் புறப்பட இருந்த நபரிடம் கோவை விமான நிலையத்தில் நடத்திய சோதனையில் அவரது பையில் இருந்த இரண்டு துப்பாக்கி குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் கோவையிலிருந்து மும்பைக்கு நேற்று மாலை விஸ்தாரா நிறுவன விமானத்தில் பயணம் செய்யவிருந்த பயணிகள் மற்றும் உடமைகளை முதற்கட்டமாக பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒருவரது கைப்பையில் இரண்டு துப்பாக்கி தோட்டக்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கொண்டு வந்த ராஜஸ்தானை சேர்ந்த ஷியாம்சிங் என்ற நபரிடம் விசாரித்தபோது இதுகுறித்து தனக்கு ஒன்றும் தெரியாது என அந்த நபர் கூறவே சந்தேகமடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரை பீளமேடு காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த நபர் ராஜஸ்தானை சேர்ந்த சியாம் சிங் என்பதும் கடந்த மாதம் திருப்பூரில் உள்ள தனது சகோதரர் வீட்டிற்கு வந்து தங்கியிருந்த பின்னர் நேற்று பிற்பகல் தனது சொந்த ஊருக்கு செல்ல இருந்ததும் முதலில் மும்பை சென்று அங்கிருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூருக்கு செல்ல இருந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விஸ்தாரா விமான நிறுவன பாதுகாப்பு பரிசோதகர் அருண்குமார் அளித்த புகாரின் பேரில் பீளமேடு காவல்நிலைய போலீசார் ஆயுத கடத்தல் பிரிவில் வழக்குபதிவு செய்து அந்த நபரை கைது செய்தனர்.

Views: - 298

0

0