திமுக கூட்டம் நடந்த மண்டபத்தில் திடீர் விரிசல்.. உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்த தொண்டர்கள்!!
Author: Udayachandran RadhaKrishnan18 August 2025, 1:59 pm
புதுக்கோட்டை மாலையிடு அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு சார்பில் மாபெரும் கருத்தரங்க கூட்டம் மற்றும் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு ஆதி திராவிடர் குழு திமுக மாநில செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். இந்த திமுக ஆதிதிராவிடர் நலக்குழு கருத்தரங்க கூட்டத்திற்கு தமிழக கனிமவளத் துறை அமைச்சர் ரகுபதி மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்ய நாதன் சட்டமன்ற உறுப்பினர் முத்துராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட நலக்குழு சேர்ந்த உறுப்பினர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர் கூட்டம் தொடங்கி முடியும் தருவாயில் அந்த திருமண மண்டபத்தில் இரண்டாவது தளத்தில் தொண்டர்களுக்காக மதிய உணவு தயார் செய்து அதனை 300 மேற்பட்ட தொண்டர்கள் அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தனர்.
அப்பொழுது திடீரென உணவருந்தும் கூடத்தில் உள்ள தரைத்தளத்தில் உள்ள கிரானைட் கற்கள் திடீரென அதிக சட்டத்துடன் தாறுமாறாக வெடித்தது.
இதனால் உணவருந்து கொண்டிருந்த 300க்கும் மேற்பட்டவர்கள் என்ன ஏது என்று தெரியாமல் உயிர் பயத்தில் அலறி அடித்துக் கொண்டு இரண்டாவது மாடியில் இருந்து படிகள் வழியாக மண்டபத்தை விட்டு வெளியே ஓடினர்.

இதனால் மண்டபத்தில் அங்குமிங்கும் கூச்சலும் குழப்பமாக இருந்தது.. ஒரு சிலர் மேல் தளம் இடிந்து விழுந்தது என்றும்.. ஒரு சிலர் சிலிண்டர் வெடித்து விட்டது என்றும் ஒரு சிலர் பூகம்பம் ஏற்பட்டு விட்டது என்றும் ஆளுக்கு ஒரு வதந்தி செய்திகளை கூறிக் கொண்டு ஓடியதால் மண்டபம் முழுவதும் பதட்டம் நிலவியது.

இந்நிலையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது . சமையல் செய்து கொண்டிருந்த சமையல் கலைஞர்களும் சாப்பாடு பரிமாறிக் கொண்டிருந்த சமையல் கலைஞர்களும் உயிர் பயத்தில் உடைமைகளை விட்டுவிட்டு மண்டபத்திற்கு வெளியே ஓடி வந்தனர்.
அங்கே திருமண மண்டபத்தில் இரண்டு திருமண அரங்குகள் இருப்பதால் அந்த மண்டபம் வளாகம் முழுவதும் பரபரப்புடன் காணப்பட்டது.
இந்நிலையில் மண்டபத்தின் ஊழியர்கள் கிரானைட் கற்கள் வெடித்த இரண்டாவது தளத்திற்கு சென்று பார்த்த பொழுது அங்கு சுமார் 20 மீட்டர் நீளத்திற்கு கிரானைட் கற்கள் வெடித்து ஒரு பகுதியை தரைத்தளம் உயர்வாகவும் வெடித்த பகுதி தாழ்வாகவும் பிளந்து இருந்தது .

பின்னர் மண்டபத்திற்கு வெளியே நின்று இருந்தவர்களுக்கு உண்மை தகவலை கூறிய பின்னர் தான் அனைவரும் அந்த அதிர்ச்சியில் இருந்து மீண்டனர்.
திமுக கருத்தரங்கு கூட்டத்தில் தரைத்தளம் வெடித்ததில் அதில் இருந்த மக்கள் பதட்டத்துடன் உயிர் பயத்தில் ஓடிய சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
