இயக்குநர் பாலா – நடிகர் சூர்யாவின் புதிய சென்டிமென்ட்… குமரியில் 41வது படபூஜையில் பங்கேற்ற படக்குழுவினர்…!

Author: Babu Lakshmanan
28 March 2022, 7:01 pm
Quick Share

கன்னியாகுமரி: நடிகர் சூர்யாவின் 41 ஆவது படத்தின் பூஜை மற்றும் படப்பிடிப்பு கன்னியாகுமரியில் திங்கள்கிழமை தொடங்கியது.

இயக்குநர் பாலா இயக்கத்தில், சூர்யா நடிக்கும் பெயரிடப்படாத புதிய படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் தொடங்கியது. நடிகர் சூர்யாவுக்கு நந்தா படத்தின் மூலம் சரியான திசையை காட்டியவர் இயக்குநர் பாலா. நந்தாவுக்கு பிறகு பிதாமகன் படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் சூர்யா. பின்னர் பாலா தயாரித்த மாயாவியிலும் சூர்யா நடித்திருந்தார்.

இந்நிலையில், பிதாமகன் திரைப்படம் வெளியாகி 18 ஆண்டுகளுக்குப் பின்னர் பாலாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படத்தில் சூர்யா நடிக்கிறார். இப்படத்தின் பூஜை கன்னியாகுமரி முருகன் குன்றம் வேல்முருகன் கோயிலில் நடைபெற்றது. இதில் நடிகர் சூர்யா, இயக்குநர் பாலா, நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 45 நாள்கள் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கன்னியாகுமரியை அடுத்த கோவளம் மீனவ கிராமத்தில் நடைபெறுகிறது. இதற்காக படக்குழுவினர் இப்பகுதியில் முகாமிட்டுள்ளனர்.

Views: - 871

0

0