ஏடிஜிபி வழக்கில் கறார் காட்டிய உச்சநீதிமன்றம்? உத்தரவுக்கு பணிந்த தமிழக அரசு?
Author: Prasad19 June 2025, 2:04 pm
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் எம்.எல்.ஏவுமான பூவை ஜெகன்மூர்த்தி மீது புகார் எழுந்தது. அதே போல் இந்த கடத்தல் சம்பவத்திற்கு தன்னுடைய வாகனத்தை தந்து உதவியாக இருந்ததாக ஏடிஜிபி ஜெயராம் மீதும் புகார் எழுந்தது.
இந்த புகாரைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இருவரும் ஆஜர் ஆனார்கள். இவ்வழக்கில் ஏடிஜிபி ஜெயராமை கைது செய்யவும் அவரை பணியில் இருந்து இடை நீக்கம் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து ஏடிஜிபி ஜெயராமை காவல்துறையினர் கைது செய்து பல மணிநேரம் விசாரித்த பிறகு விடுவித்தனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தன்னை பணி இடைநீக்கம் செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார் ஜெயராம். அப்போது இவ்வழக்கை உச்சநீதிமன்றம் விசாரித்தபோது, ஏடிஜிபி கைது செய்யப்படவில்லை, அவர் சில மணி நேரங்களிலேயே விடுவிக்கப்பட்டார் என தமிழக அரசு பதிலளித்தது.
இதனை தொடர்ந்து, பணியிடை நீக்கத்தை திரும்ப பெறுவது தொடர்பான தமிழக அரசின் நிலைப்பாட்டை கூற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில், “ஏடிஜிபி மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையில் எந்த மாற்றமும் இல்லை. வழக்கு விசாரணையில் இருப்பதால் பணியிடை நீக்கம் தொடரவேண்டும்” என்று தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
இதனை தொடர்ந்து உச்சநீதிமன்றம், ஏடிஜிபி ஜெயராமை கைது செய்வது தொடர்பான சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கை சிபிசிஐயிடம் ஒப்படைக்க அறிவிறுத்தியுள்ளது உச்சநீதிமன்றம். எனினும் இதனை தமிழக அரசு எந்த ஆட்சேபணையும் இல்லாமல் ஏற்றுக்கொண்டது.