இதுக்கு யார் பொறுப்பு..? குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகப் பொருட்கள்… பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சி!!

Author: Babu Lakshmanan
25 May 2023, 1:06 pm
Quick Share

திருச்சி ; திருச்சி அருகே குப்பை அள்ளும் வண்டியில் அம்மா உணவகத்திற்கான அரிசி உள்ளிட்ட பொருட்கள் எடுத்து செல்லப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம், துறையூர் பேருந்து நிலையத்தின் முன்பு நகராட்சி நிர்வாகத்திற்குட்பட்ட அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு காலை, மாலை என இருவேளைகளில் பணியாளர்கள் 12 பேர் சமையல் உள்ளிட்ட பணிகளைச் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த ஒரு வார காலமாக அம்மா உணவகத்தில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாகவும், வெளியில் இருந்து அரிசி வாங்கி சமைத்ததாகவும் கூறப்படுகிறது. நேற்று அம்மா உணவகத்திற்கு அரிசி மூட்டைகள் துறையூர் நகராட்சியில் குப்பை அள்ளுவதற்காக பயன்படுத்தப்படும் மினிடோர் வாகனத்தில் வந்து இறங்கியது.

இதைக் கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அன்றாடம் கூலி வேலைக்கு செல்வோர் மற்றும் நகர்ப்புற ஏழை எளிய மக்கள் பசியாறும் குறைந்த விலையில் விற்கப்படும் உணவுக்கு உண்டான அரிசியை குப்பை அள்ளும் வாகனத்தில் சுகாதார அதிகாரியின் மேற்பார்வையில் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பேருந்து நிலையத்தில் உள்ள பயணிகள் மற்றும் பொது மக்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. துறையூர் நகராட்சியில் சுகாதார ஆய்வாளரின் நேரடிப் பார்வையில் உள்ள அம்மா உணவகத்தில் தரம், சுகாதாரம் உள்ளிட்டவற்றை தினந்தோறும் ஆய்வு செய்து, சுத்தமான உணவை வழங்கிட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது.

Views: - 293

0

0