அடுத்தடுத்து தீப்பிடித்து எரியும் எலக்ட்ரிக் பைக் : அச்சத்தில் வாகன ஓட்டிகள்…காரணம் என்ன?

Author: Babu Lakshmanan
29 March 2022, 8:26 pm
Quick Share

சென்னையில் மீண்டும் ஒரு மின்சார பேட்டரி இரு சக்கர வாகனம் தீப்பிடித்து எரிந்தது.

சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் பாலமுருகன். இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருடைய மகன் கணேஷ் இவர் திருவொற்றியூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில். இன்று மாலை பணியை முடித்துவிட்டு இவர் வழக்கம் போல் இல்லத்திற்குச் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது. திருவொற்றியூர் மணலி மாதவரம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தபோது. அவருடைய இரு சக்கர வாகனத்தில் இருந்து வழக்கத்திற்கு மாறான மாறுபட்ட சத்தம் வருவதை கண்டு வாகனத்தை ஒரு ஓரமாக நிறுத்தியுள்ளார்.

அப்போது அவருடைய வாகனத்தில் இருந்து திடீரென புகை வருவதை கண்டு வாகனத்தினை அங்கேயே நிறுத்தி விட்டு சற்று தள்ளி சென்றுள்ளார். திடீரென அவரது இருசக்கர பேட்டரி வாகனம் தீப்பற்றி எரியத் துவங்கியது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் செய்வது அறியாமல் சற்று நேரம் திகைத்து நிற்க அதற்குள் வாகனம் முற்றிலுமாக எரிந்து நாசமாகி விட்டது அப்போது அந்த வழியாக சென்ற குடிநீர் வாரியத்திற்கு சொந்தமான தண்ணி லாரியை நிறுத்தி எரிந்து கொண்டிருந்த அந்த இரு சக்கர வாகனத்தின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

இதனை அடுத்து கணேஷ் இந்த தகவலை தனது தந்தை பாலமுருகன் அவருக்கு செல்போன் வாயிலாக தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து அவரது தந்தை சம்பவம் குறித்து மாதவரம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து, சம்பவ இடத்திற்கு வந்த மாதவரம் பால்பண்ணை காவல்துறையினர், இந்த எலக்ட்ரிக் வாகனம் எதனால் தீப்பிடித்து எரிந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்ச்சியாக அடுத்தடுத்து எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்கள் தீப்பிடித்து எரிவது பொதுமக்களிடையே பெரும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Views: - 752

0

0