மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்யுங்க.. கி. வீரமணிக்கு தகைசால் தமிழர் விருது கொடுக்கலாமா..? அர்ஜுன் சம்பத் எதிர்ப்பு

Author: Babu Lakshmanan
2 August 2023, 4:47 pm
Quick Share

திருச்சி ; மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சியின் மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் கலவரம் தொடர்பாக தமிழகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சிகளில் வேண்டும் என்றே உள்நோக்கத்துடன் இந்திய நாட்டை அவமதிக்கும் வகையில், ஒருமைப்பாட்டை சிதைக்கும் வகையில், மத கலவரத்தை தூண்டும் வகையில், செயல்படும் இஸ்லாமிய மத அடிப்படை வாத அமைப்புகள், கிறிஸ்துவ மதவெறி நிறுவனங்கள், கம்யூனிச அமைப்புகள், திராவிட கழக அமைப்புகள் ஆகியவற்றை தடை செய்ய வேண்டும், மேலும் ராமர், லட்சுமணர் சீதா தேவியை நிர்வாணமாக வரைந்து வெளியிட்ட ஓவியங்களை தடை செய்ய வேண்டும்.

குறிப்பாக மனித நேயம் மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும், சம்பந்தப்பட்ட குற்றவாளர்களை கைது செய்ய வேண்டும் என திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை நேரில் சந்தித்து இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் புகார் மனு கொடுத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- தமிழகத்தில் திண்டுக்கல் பகுதியில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடைபெற்ற நிகழ்ச்சி மற்றும் விளம்பரங்களில் ராமர், சீதை லட்சுமணர், வடிவங்களில் மோடி, அமித்ஷா ,சீதா தேவி ஆகியோரை நிர்வாணமாக வரைந்து தேசிய கொடியின் வண்ணம் போட்டு தேசபக்தர்களின் மனம் புண்படும்படியாக, மத கலவரத்தை தூண்டும் விதமாக மனிதநேய மக்கள் கட்சி சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக இதை தடை செய்து வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். மனிதநேய மக்கள் கட்சியை தடை செய்ய வேண்டும். குறிப்பாக ஜவஹிருல்லா பெயரில் இது வெளியிடப்பட்டுள்ளது, அவரை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.

மேலும் திராவிட கழகம் நடத்துகின்ற போராட்டங்கள், கம்யூனிஸ்டுகள் நடத்துகின்ற போராட்டங்கள், கிறிஸ்துவ கல்வி நிறுவனங்களில் இருந்து மாணவர்கள், ஆசிரியர்கள், சபைகளில் இருந்து பாதிரியார்கள், கன்னியாத்திரிகள், பங்கெடுத்து கொள்கிறார்கள் இதை தடை செய்ய வேண்டும்.

திமுக கூட்டணி கட்சிகள் மணிப்பூர் சம்பவம் தொடர்பாக நடத்திய ஆர்ப்பாட்டங்களில் தமிழகத்தில் படிக்கின்ற குக்கி இனம் சார்ந்த மாணவர்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். தங்களது அரசியல் போராட்டத்திற்கு மாணவர்களை பயன்படுத்துவது சட்டப்படி தவறாகும். தமிழகத்தில் உள்ள மணிப்பூரில் கலவரம் செய்து கொண்டிருக்கின்ற கிறிஸ்துவ மாவோயிச குக்கி மாணவர்களை வெளியேற்ற வேண்டும்.

குறிப்பாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே தமிழகத்தில் மணிப்பூர் பிரச்சனையை திசை திருப்பி மோரோ பகுதியில் வசிக்கும் தமிழர்களுக்கும் இந்திய ஒருமைப்பாட்டிற்கும் விரோதமாக கிறிஸ்துவ மாவோயிச்ச நக்சல் அமைப்புகளுக்கு ஆதரவாக திமுக செயல் படுகிறது. இதை மத்திய மாநில அரசுகள் கண்காணித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் ஸ்ரீரங்கம் கோவில் வளாகத்தில் உள்ள ராமானுஜம் சன்னதியில் கோலம் போடுவது வழக்கம், அதில் அவர்களுக்கு பிடித்தமான கோலங்களை போடுவது அவர்கள் உரிமை. ஆனால், இந்து அறநிலைத்துறை சேர்ந்த அதிகாரிகள் தாமரை வடிவில் கோலம் போடக்கூடாது என தெரிவித்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, தாமரை என்பது நமது தேசிய மலர், இந்து அறநிலை துறை அதிகாரிகள் உள்நோக்கத்துடன் செயல்படுவது கைவிட வேண்டும்.

திருச்சி மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் சாலைகளை சரியாக சீரமைக்காமல் இருப்பதால் குண்டும், குழியுமாக காணப்படும் சாலைகளில் தொடர் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது, இரண்டு தினங்களுக்கு முன்பு கூட பள்ளி மாணவி இறந்துள்ளார். ஆகையால் மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

திராவிட கழக தலைவர் கி வீரமணிக்கு அரசு தரப்பில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த விருதுக்கு தகுதியற்றவர் கி.வீரமணி, வேண்டுமென்றால் திமுக சார்பாக தகைசால் திராவிட விருது வேண்டுமென்றால் கொடுக்கலாம், என தெரிவித்தார்.

Views: - 259

0

0