கோவையில் தேவாலயம் மீது தாக்குதல்…3 பேர் கைது: அரியலூர் மாணவி தற்கொலை சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் என வாக்குமூலம்..!!

Author: Rajesh
28 January 2022, 2:02 pm
Quick Share

கோவை: கோவையில் தேவாலயம் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பாக மூன்றாவது நபரை கைது செய்துள்ள போலீசார், மற்றொருவரையும் கைது செய்ய தீவிரம் காட்டி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியில் 50 ஆண்டுகள் பழமையான டிரினிட்டி தேவாலயம் உள்ளது. கடந்த 24ம் தேதி இரவு இந்த தேவாலயத்தில் புகுந்த மர்ம நபர்கள் செபாஸ்தியர் சிலை மீது தாக்குதல் நடத்தினர்.

இதில் செபஸ்தியர் சிலை சேதமான நிலையில் ,இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த ராமநாதபுரம் காவல் நிலைய போலீசார், அப்பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தினர். இதில் இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த நால்வர் கட்டை மற்றும் கற்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த 16 வயது சிறுவன் மற்றும் மதன்குமார் ஆகிய இருவரை கண்டறிந்து நேற்று கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய அதே அமைப்பை சேர்ந்த தீபக் என்பவரை நேற்று இரவு கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள மருதாசல மூர்த்தி என்பவரை தேடி வருகின்றனர்.

அரியலூர் மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றிருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Views: - 1356

0

0